திங்கள், 31 அக்டோபர், 2022

வல்வெட்டித்துறை சிவன் கோவில்.

இன்றைய சிவாலய கோபுர தரிசனம்..!!🙏*

*"வல்வெட்டித்துறை சிவன் கோவில்..!!*

*வல்வெட்டித்துறை சிவன் கோவில் என அழைக்கப்படும் வல்வை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி கோயில் இலங்கையின் வடக்கே வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இத்தலத்தின் மூலவர் வைத்தீசுவரப் பெருமானும் தாயார் ஶ்ரீவாலாம்பிகா தேவியும் ஆவார். இக்கோயிலை அமைத்தவர் வெங்கடாசலம்பிள்ளை ஆவார்.*

*வல்வெட்டித்துறை சிவன் கோவில்*
*அமைவிடம்*

*இக்கோயில் வல்வெட்டித்துறை-காங்கேசன்துறை சாலையில் வல்வைச் சந்தியிலிருந்து 300 யார் தொலைவில் மேற்குத் திசையில் முத்துமாரி அம்மன் கோயிலுக்குத் தென் திசையில் 'இராசிந்தான் கலட்டி’ என்று சொல்லப்படும் காணியில் அமைந்துள்ளது.*

*தல வரலாறு*

*இக்கோவிலின் நிறுவனர் வெங்கடாசலம்பிள்ளையின் தந்தை திருமேனியாரின் தந்தை ஐயம்பெருமாள் வேலாயுதர் என்பவர் அரசாட்சியினரால் “அடப்பன்” என்ற பதவி வழங்கப்பெற்றவர். இது நெய்தல் நிலத் தலைவனைக் குறிப்பதாகும். யாழ்ப்பாணப் பகுதியில் அக்காலம் வாழ்ந்த முன்னணிப் பிரமுகர் வரிசையில் வல்வெட்டித்துறையை சார்ந்த மேற்குறிக்கப்பட்ட ஐயம்பெருமாள் வேலாயுதர் என்பவரைப் பற்றியும் அவரது புத்திரர்கள் பற்றிய விபரமும் வசாவிளான் கல்லடி வேலுப்பிள்ளையால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலாயுதரின் புத்திரர்களில் ஒருவரான புண்ணியமூர்த்தி என்பவர் வல்வை முத்துமாரி அம்மன் கோயிலைக் கட்டியவர். இன்னொரு புத்திரரான திருமேனியாரின் புத்திரர்களில் ஒருவரான குழந்தைவேற்பிள்ளை என்பவர் கொழும்பிலுள்ள யாழ்ப்பாணத்தார் கதிர்வேலாயுதசுவாமி கோயிலையும், பர்மாவில் ஒரு முருகன் கோயிலையும் நிறுவினார். இன்னொரு புதல்வரான பெரியதம்பியார் அல்லது பெரியவர் என அழைக்கப்படும் வெங்கடாசலம்பிள்ளை என்பவரே வைத்தீசுவரசுவாமி கோயிலைக் கட்டினார். கடலில் மூழ்கிய அத்திலாந்திக் கிங் (Erig Atlantic king) என்னும் கப்பலை மூழ்கிய நிலையிலேயே விலை கொடுத்து வாங்கி அதனை மீட்டெடுத்து வேண்டிய திருத்தங்கள் செய்து அதன் மூலம் கடல் வணிகம் செய்து கிடைத்த செல்வத்தில் ஒருபகுதியைக் கொண்டே இக்கோயிலைக் கட்டினார்.*

*வெங்கடாசலம் பிள்ளையவர்கள் முத்துமாரி அம்மன் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருக்கும் காலத்தில் கம்பர்மலையை சார்ந்த அன்பர் ஒருவருடன் மாலை வேளைகளில் காலாற உலாவி வருவது வழக்கம். இப்படி நடந்துவரும் நாளில் ஒரு நாள் அம்மன் கோவில் பக்கமிருந்து தெற்கு நோக்கி வரும் சமயம் பற்றைக்காடாக மஞ்சல் பஞ்செடிகள் நிறைந்த பகுதியில் நெருப்பு எரிவது போன்ற ஒரு ஒளி தென்பட்டதாகவும் இருவரும் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அவ்விடத்தில் மாட்டுச்சாணம் தெரிந்ததாயும் மறுநாள் இவரின் தந்தையாரான திருமேனியார் கனவில் தோன்றி அவ்விடத்தில் சிவனுக்கு ஆலயம் எடுக்கும்படி பணித்தார் என்றும் தெரியவருகிறது. தமக்கு பரம்பரையாக வந்த தோட்டங்கள் வயல்கள் ஆகியவற்றை திருத்திப் பயிரிட்டும், பல புதிய காணிகளை விலைக்கு வாங்கியும் செல்வத்தை குவித்து அத்தோடு கப்பல்களுக்கு அதிபதியாகி கடல் வணிகஞ் செய்தும் செல்வத்தை குவித்தார். அம்மன் கோயிலுக்கு தெற்குப் பகுதியிலிருந்த மடத்திலுருந்து கொண்டே அம்மடத்திற்குத் தென்பக்கமாக இருந்த 60 பரப்பு காணியை விலைகொடுத்து வாங்கினார். இராசிந்தன் கலட்டி என அழைக்கப்படும் இக்காணியை துப்பரவு செய்து 1867ம் வருடம் அத்திவாரம் இடுதலாகிய சங்குத்தானம் செய்வித்தார். இக்கோயிலை கட்டுவதற்காக இவரின் தம்பிமார்களாகிய குழந்தைவேற் பிள்ளையும், இராமசாமியும் தங்கள் செல்வமெல்லாவற்றையும் வழங்கியிருந்தார்கள்.*

*இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறந்த சிற்பிகள் பலவகைக் கம்மியர்கள் கோயில் கட்டுமான வேலைகளைத் திறம்படச் செய்தனர். கோயில் கட்டத்தொடங்கிய 1867ம் வருடம் தொடக்கம் சிவபதமெய்திய 1900 வருடம் வரை கோயில் எசமானர்களுக்கு கோயில் கட்டுவதற்கும், பூசைக் கிரமங்களுக்கு வேண்டிய அறிவுரைகளையும், சரீர உதவிகளையும் வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வைத்தியலிங்கம் பிள்ளையவர்கள் வழங்கி வந்துள்ளார்கள். இக்கோயிலுக்கான இலிங்கத்தையும் ஆவுடையாரையும் காசிவரை சென்று அக்காலத்தில் பிரபுவாயிருந்த ஆ.விஸ்வநாதபிள்ளை என்பவர் கொண்டு வந்தார். கொழும்பிலுள்ள சிவஶ்ரீ நா.குமாரசாமிக்குருக்களுடன் திரு.குழந்தைவேற்பிள்ளையவர்கள் தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து சுபானு வருடம் 08.06.1883ல் நூ தனப்பிரதிட்டா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடந்தேறியது. இவ்வாலயத்து லிங்கம் ‘பாணலிங்கம்’ என்று சொல்லப்படுகிறது*
*விஸ்வநாதப்பிள்ளையவர்கள் லிங்கத்துடன் உற்சவமூத்திகளாகிய நடேசர், சந்திரசேகர் ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுக்க இவரது மகன் சரவணமுத்துபிள்ளையவர்கள் சுவாமி கோயிலுக்குத் தங்கத் தகடு மருவிய தூபி முடியை இயற்றுவித்துக் கொடுத்துள்ளார்.

நடந்து முடிந்த கும்பாபிஷேகத்திற்கு பருத்தித்துறை, வண்ணார்பண்ணை, நல்லுர், வல்வெட்டி, உடுப்பிட்டி, கம்பாமலை, சரசாலை, மீசாலை, மந்துவில், கற்கோவளம், தொண்டைமானாறு, மயிலிட்டி, காங்கோசன்துறை, தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, காரைதீவு, திருகோணமலை, கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ளஅடியவர்களும் நாட்டுக்கோட்டை செட்டிமார்களும் கும்பாபிஷேகக் கிரியைகளுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் நிதியுதவி என்பனவற்றை வழங்கியிருந்தார்கள். கும்பாபிஷேகத்தையடுத்து முறையாக ஆறுகாப் பூசைகள் நடைபெறலாயின. முதல்முதலாகப் புலோலியைச் சோர்ந்த பிரம்மஶ்ரீ சண்முகநாதக்குருக்கள் பிரதம பூசகராயிருந்து பூசைகளை நடாத்தி வந்தார். ஆறுகாலப் பூசையுடன் நித்தியோற்சவம், நித்தியாக்கினி என்பனவும் நடைபெறத் தொடங்கின.*

*கும்பாபிஷேகத்துக்கான பொருளுதவி போன்றவற்றை வல்வையைச் சாராத பிறஊர்களைச் சேர்ந்த அடியார்கள் செய்தது போல மஹோற்சவங்களையும் வல்வையின் அயற் கிராமங்களான வல்வெட்டி, கம்பர்மலை, உடுப்பிட்டி, தொண்டைமானாறு, மயிலிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த அடியார்கள் ஏற்று நடாத்தி வருவது ஒரு சிறப்பான அம்சமாகும். கும்பாபிஷேக தினத்தன்று மயிலிட்டியைச் சேர்ந்த அடியார் ஒருவர்அதில் கலந்து கொள்ளும் நோக்கோடு வல்வை வந்து கோயில் வாசலிலுள்ள கிணற்றில் கால் அலம்பிவிட்டு உள்ளே செல்ல முற்பட்ட சமயம் கோயில் வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் இந்த அடியாரை நோக்கி உமது காலின் பிற்பக்கம் அலம்பப்படவில்லையென்று கூறியிருக்கின்றார். அச்சமயம் வாசலைத் துப்பரவு பண்ணி க் கொண்டிருந்தவர் இடுப்பில் ஒரு சிறிய துண்டை மட்டும் கட்டிக் கொண்டிருந்தமையால் வந்தவர் அவருக்கு அலட்சியமான வார்த்தைகளைக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகி எசமானுக்கு சங்கற்பம் செய்யும் போதுதான் தான் அலட்சியமான வார்த்தைகளைக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகி எசமானுக்கு சங்கற்பம் செய்யும் போதுதான் தான் அலட்சியமான வார்த்தைகளை கூறியவர் தான் இக் கோயிலின் எசமான் என்பதை அறிந்து கொண்டதோடு கிரியைகள் யாவும் நிறைவுற்றதன் பின் எசமானரான வெங்கடாசலம்பிள்ளையவர்களிடம் வந்து மன்னிப்புக் கோரியதோடு இதற்குண்டான தண்டனை எதுவோ அதைத்தான் ஏற்றுக்கொள்வதாயும் கூறினார். இச் சந்தர்ப்பத்தில் எசமான் அந்த அன்பரிடம் சிவனின் கொடியேற்றத்திருவிழாவை ஏற்று நடாத்தும்படி கேட்க அந்த அன்பரும் அதனை ஏற்று நடாத்துவதற்குச் சம்மதத்தை தெரிவித்தார். இச் சம்பவமே மயிலிட்டி அன்பர்கள், கொடியற்ற விழாவினை ஏற்று நடாத்துவதற்காக அமைந்ததென எமது முன்னோர்கள் மூலம் அறிந்து கொண்டதாகும்.*

*இக்கோயிலின் நித்திய நைமித்திய பூசைச் செலவுக்காக வல்வையிலுள்ள வியாபாரிகள் முதலானோர் பல வகையான ஏற்பாடுகளைச் செய்து மகமைப் பொடுட்களை வழங்கி வந்துள்ளார்கள். வே.வைரமுத்துப்பிள்ளையென்னும் பிரபல வர்த்தகரொருவர் தான் கொடுக்கும் மகமைப் பொருட்களை செவ்வனே கொடுத்து வந்ததோடு மட்டக்களப்பில் நெல்லுக்கிள்ளலாகிய ஒரு ஏற்பாட்டைத் தாமே உண்டு பண்ணி அதில் கிடைக்கும் வருவாயைக் கோயிலுக்கு வழங்கி வந்துள்ளார். இந்தப் பிடிநெல்லுக்கிள்ளும் ஏற்பாட்டைத் தவிர இவ்வூரவர்கள் பிடி அரிசி கிள்ளுதல், உண்டிகைப் பெட்டி மகமை, வியாபார மகமை, கூலி மகமை, சம்பள மகமை ஆகியவற்றையும் ஏற்பாடு பண்ணி வந்துள்ளார்கள்.*

*திரு.வெங்கடாசலம்பிள்ளையவர்கள் 24.10.1892 சிவபதமடைய இவரின் சகோதரர்கள் ஒருவரான திருமேனியார் குழந்தைவேற்பிள்ளையவர்கள் எசமான் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில் வட்டுகோட்டை கிழக்கு சித்தங்கேணியைச் சேர்ந்த யாழ்குடாநாட்டின் கண் உள்ள பிரபுக்களில் ஒருவரான காசிநாதர் வயித்திலிங்கம் என்பவர் 1901ம் வருடம் வசந்தமண்டபத்தினைக் கருங்கல்லினால் கட்டிக்கொடுத்துள்ளார். இவர் யாழ் குடா நாட்டிலுள்ள அனேக கோயில்கள், பாடசாலை என்பவற்றிக்குப் பல தர்மாகாரியங்கள் செய்தவர். திரு.குழந்தைவேற்பிள்ளையவர்கள் 1905 வரை கோயில் எசமானாக இருந்து சிறப்புற நடாத்தி வந்துள்ளார். இவருக்குப் பின் திரு.வெங்கடாசலம்பிள்ளையவர்களின் இளைய சகோதரர் இராமசாமி அவர்கள் எசமான் பொறுப்பை ஏற்று 1912 ம் வருடம் வரை பணியாற்றினார். இராமசாமி அவர்களுக்குப்பின் கோயில் ஸ்தாபகர் வெங்கடாசலம்பிள்ளையவர்களின் இரண்டாவது புத்திரரான சின்னத்துரை என அழைக்கப்படும் திருமேனிப்பிள்ளையவர்கள் கோயில் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் . இவரது காலத்தில் பலதிருப்பணி வேலைகள் இடம்பெற்றன. இந்தியாவைச் சேர்ந்த தெலுங்கு தேச வர்த்தகரான காரஞ்சேடு ஏர்லக்கட்டர் அரங்கநாயுடுகாரு என்னும் பிரபு முன்வாயில் மண்டபத்தையும் கோபுர அடிப்பாகத்தையும் அமைத்து கொடுத்துள்ளார். இந்த வர்த்தகர் பல கப்பல்களுக்கு அதிபதியாக இருந்ததுடன் தனது கப்பல்களுக்கெல்லாம் வல்வை வாசிகளையே தண்டயல்களாகவும் இதர மாலுமிகளாகலும் பணிக்கமர்த்தியவர்.

வல்வைப்பிரபுவாகிய விஸ்வநாதர் சரவண முத்துப்பிள்ளை என்பவர் நடராஜர் மண்டபத்தை அமைத்துக்கொடுத்ததோடு கோயில் வாயில் பெருவீதிக்கும் தனது நிலத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து உதவினார். கம்பர்மலையைச் சேர்ந்த வல்லியப்பர் வேலுப்பிள்ளையும் பெண் பாறுவதிப் பிள்ளையும் வேறு சில திருப்பணி வேலைகளைச் செய்து கொடுத்துள்ளார்கள்.*

*1908ம் வருடமளவில் காசியிலிருந்து வந்த காசிய கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மஶ்ரீ குமாரசாமிக்குருக்களின் மகனும் நீர்வேலியில் ஜனனமும், கோப்பாயில் வாசம் செய்தவரும், ஆரிய திராவிட மொழிகளில் திறமை உடையவரும், கிரியாவிற்பன்னரும், குருலட்சணமும் நிறைந்தவருமான பிரம்மஶ்ரீ கார்த்திகேயக்குருக்கள் பிரதம பூசகரானார்.*

*திருமேனிப்பிள்ளையவர்கள் எசமானராக இருந்த காலத்தில் நொத்தாரிசு சபாரெத்தினம் முகதாவில் 08.03.1921ல் 4889 இலக்கம் கொண்ட கோயிலின் பொறுப்பாளி நியமிப்புச் சாதனத்தில் சுவாமியின் பெயர் வைத்தீஸ்வரர் என்றும் அம்பிகையின் பெயர் தையல்நாயகி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1883ம் வருடம் இயற்றமிழ் போதகாசிரியர் வல்வை வைத்திலிங்கம்பிள்ளையவர்கள் பாடிய ஊஞ்சல் பதிகத்திலும் அம்பிகையின் பெயர் தையல்நாயகி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 4889 இலக்க சாதனத்தில் கோயிலுக்கான அசைவுள்ள சொத்துக்கள், அசைவற்ற ஆதனங்கள் யாவற்றையும் தன்னுடன் சேர்த்துப் பராமரிப்பதற்காக அறங்காவலர்களாக தனது மூத்த சகோதரன் வேலுப்பிள்ளையின் மகன் திருவேங்கடத்தையும், இளை சகோதரரின் மகன்களான அருணாசலம் வேங்கடாசலம், அருணாசலம் சபாரத்தினம் ஆகிய மூவரையும் நியமிப்பதோடு மூத்தவரான வேலுப்பிள்ளை திரு.வேங்கடமே மற்றைய இருவரையும் ஒருப்படுத்தி முதன்மையுடையவராக இருந்து சகல செய்கைகளையும் செய்து வரவேண்டுமெனவும் குறித்த மூவரும் சீவிய காலத்தின் பின் அவர் அல்லது அவர்களின் ஆண் சந்ததியாரே கேயிலைப் பராமரிக்க வேண்டுமென்றும் குறித்த மூவருக்கும் அல்லது அவர்களின் வழித்தோன்றல்களில் ஆண் சந்ததி இல்லாமற்போனால் தனதும் தனது சகோதரர்களினதும் பெண்சந்ததியாரில் வரும் ஆண்சந்ததியாருமே கோயிலையும் இதர ஆதனங்களையும் பராமரித்து வரவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறங் காவலர்கள் கோயிலைப் பராமரிப்பதிலும், கணக்குக் காட்டுவதிலும் ஒழுங்கீனங்கள் ஏற்பட்டால் அதனை விசாரிப்பதற்காக ஒன்பது பேர் கொண்ட விசாரணை கர்த்தாக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.*

*திருமேனிப்பிள்ளையவர்கள் காலத்தில் 1919ம் வருடம் அமிர்தானந்தசுவாமிகள் என்னும் அந்தணப் பெரியார் இவ்விடம் வந்து ஊரவர்கள், அயலூரவர்கள் ஆகியோருடைய பொருளுதவியோடு புனராவர்த்தனப் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் ஒன்றினை நடாத்தி வைத்தார். பிரம்மஶ்ரீ கார்த்திகேயக் குருக்கள் காலத்தில் அவரது விருப்பப்படி சிறியதந்தையாரான மாப்பிள்ளை குருக்கள் என அழைக்கப்படும் இராமலிங்கக் குருக்கள் பிரதான ஆசாரியாக இருந்து இக்கும்பாபிஷேகம் சிறப்புற நடாத்தி வைக்கப்பட்டது. இக்கும்பாபிஷேகம் நிகழ்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் வல்வை ச.செல்வவிநாயகம், திரு.ஆ.வேலுப்பிள்ளை ஆகியோராவார்கள்.*

*1921ம் வருடம் திருமேனிப்பிள்ளையவர்கள் சிவபதமடைய இவரது இளைய சகோதரனான அருணாச்சலத்தின் மூத்தமகன் வெங்கடாசலம் அவர்கள் எசமானாகப் பொறுப்பேற்று நடாத்தி வந்து சிறிதுகாலத்தின் பின் தனது தம்பியாரான சபாரெத்தினம் அவர்களிடம் கோயில் பொறுப்புக்களை ஒப்படைத்தார். சபாரெத்தினம் அவர்கள் 1923 தொடக்கம்1956 வரை கோயிலை நிர்வகித்து வருங்காலத்தில் இராஜகோபுரத்தை 1939ம் வருடம் வல்வைப் பெரியார் சி.செல்லத்துரை பிள்ளையவர்களும், தேவி வாசல் மண்டபத்தை ஆசிரியர் வே.வ.சிவப்பிரகாசம் அவர்களும் மணிக்கோபுரத்தை திரு.ச.துரைராஜா அவர்களும் வசந்த மண்டபப் பூச்சு வேலையை திரு.சி.குமாரசாமி அவர்களும் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மணிக்கோபுரத்தில் அமைப்பதற்கான மணியினை திரு.ம.இராமசாமி என்பவர் வழங்கியுள்ளார்.*

*பிரம்மஶ்ரீ கார்த்திகேயக் குருக்கள் பிரதம குருக்களாக இருந்துவரும் காலத்திலே மகன் சின்னப்பா குருக்கள் என அழைக்கப்படும் நீலகண்டக் குருக்கள், தகப்பனுடன் கூட இருந்து பூசனைகளை நடத்தி வர உதவினார். பிரம்மஶ்ரீ கார்த்திகேயக் குருக்கள் 1930 இல் இறைவனடி சேர்ந்ததைத் தொடர்ந்து உதவியாளராக இருந்த நீலகண்டக்குருக்கள் பிரதம பூசகரானார் . இக் காலத்தில் ஆலய மேற்குவாசல் கோபுரம் அமைப்பதற்கான வேலைகள் திரு.சி.நாகரெத்தினம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவேற்றப்பட்ட சமயம் இடையில் ஏற்பட்ட தடங்கலினால் கோபுர வேலைமுற்றுப் பெறாமல் போய்விட்டது. பிரம்மஶ்ரீ நீலகண்டக்குருக்கள் பிரதம பூசகராக இருக்கும் காலத்தில் 1942ல் அவரது மகன் பரமேஸ்வரக் குருக்கள் பூசைகளை நடாத்ததுவதற்கு உதவி செய்து வந்தார். இச் சந்தர்ப்பத்தில் 1954ம் வருடம் நீலகண்டக் குருக்கள் இறைவனடி சேர்ந்ததைத் தொடர்ந்து பிரம்மஶ்ரீ பரமேஸ்வரக் குருக்கள் பிரதம பூசகரானார்.

இக்காலகட்டத்தில் 1956ம் வருடம் கோயில் எசமான் சபாரத்தினம் அவர்கள் சிவபதமடைய இவரது தமையன் வெங்கடாசலம் அவர்களின் மேற்பார்வையில் சபாரத்தினம் அவர்களது மூன்றாவது மகன் சின்னத்துரை அவர்கள் கோயில் ஸ்தாபகர் திரு.வெங்டாசலம்பிள்ளை அவர்களின் ஆண்வாரிசுகள் எண்மரின் சார்பாக 1956ல் கோயில் எசமானர் ஆனார். கோயில் கும்பாபிஷேகம் நடத்தக் காலம் தாழ்த்தியதால் வல்வையிலுள்ள சிவநேயப் பிரபுக்களான திருவாளர்கள் சி.விஷ்ணுசுந்தரம், அ.துரைராசா, ச.ஞானமூர்த்தி க. சோமசு- -ந்தரம் ஆகியோர் ஒன்று கூடித் திருப்பணிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு 25.04.1966இல் பாலஸ்தானம் செய்யப்பெற்றது.கோயில்ப பூச்சு வேலைகளுக்கான பூச்சு மைகள் யாவும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு திருப்பணிகள் யாவும் நிறைவெய்திய பின் புனராவர்த்தன மகாகும்பாபிஷேகம் பிலவங்க வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி திருதியை திதியும் புனர்பூச நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் (11.06.1967) பிரம்மஶ்ரீ பரமேஸ்வரக்குருக்களினால் நிறைவேற்றி வைக்கப்பட்டது. இக்கும்பாபிஷேகத்தைமுன்னிட்டு குடமுழுக்கு விழா மலர் ஒன்று வெளியிட்டு வைக்கப்படடதோடு கோயில் வாசலையும், பருத்திதுறை உடுப்பிட்டி வீதியையும் இணைக்கும் புதிய வீதி திறக்கப்பட்டு அதற்கு சிவபுர வீதி எனவும் நாமம் சூட்டப்பட்டது.*

*இரண்டாம் பிரகாரத்தின் வசந்த மண்டபத்தின் தென்பகுதி 1970ல் பெருப்பித்துக் கட்டப்பட்டு ஓடுகள் வேயப்பட்டன. இப்பணிக்கு வல்வைப் பெரிய வி.சுப்பிரமணியம் அவர் மைத்துனர் எஸ்.சண்முகம் ஆகியோர் வேண்டிய பொருளுதவிகளைச் செய்தார்கள். 1977ம் வருடம் திரு.மா.குமாரசாமி அவர்களால் உற்சவமூர்த்தி செய்விக்கப்பட்டு தைப்பூசத்தன்று பிரதிட்டை செய்யப்பட்டது. தேர் உற்சவத்தினை நடத்திவரும் வல்வெட்டி அடியார்களினால் சித்திரத்தேர் ஒன்றும் செய்து முடிக்கப்பட்டது. வல்வைப் பெரியார் எஸ்.வைரமுத்து அவர்களினால் வெள்ளி இடபவாகனம் செய்து கொடுக்கப்பட்டது. திரு.வடிவேல்(கார்வண்ணசாமி) அவர்களால் 1978ல் பஞ்சலோகத்திலான ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு உற்சவமூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டது. 26.06.1985 இல் பரமேஸ்வரக்குருக்கள் சிவபதமெய்தவே அவருக்கு உதவியாக இருந்த அவரது மகன் பிரம்மஶ்ரீ மனோகரக் குருக்கள் பிரதம பூசகரானார்.*

*1987ம் வருடம் மே மாதம் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட லிபரேசன் ஒப்பரேசனின் போது கோயில் எசமானாக இருந்த திரு.சின்னத்துரை அவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுக் காணமல் போனதையடுத்து இவரது தமையனார் இராமசாமி அவர்கள் கோயில் எசமான் ஆனார். திரு.கு.இரத்தினசிங்கம் அவர்களினால் மூலம் மூர்த்திகளான சரஸ்வதி, அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி ஆகியவை பிரதிஸ்டை செய்விக்கப்பட்டன. உற்சவமூர்த்தியான பிட்சாடன மூர்த்தியில் சில குறைபாடுகள் ஏற்பட்டமையால் புதிய உற்சவமூர்த்தி ஒன்று பஞ்சலோகத்தினால் ஆக்கப்பெற்று 09.02.1998 இல் பிரதிஸ்டா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.*

*1985, 1946, 1987ம்வருடங்களில் ஊரிக்காடு இராணுமுகாமிலிருந்தும் பலாலி இராணுவ முகாமிலிருந்தும் ஏவப்பட்ட ஆட்லறி ஏவுகணைகளினாலும் விமானக்குண்டுவீச்சுக்களினாலும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன. 1991ம் வருடம் தை மாதம் கோயிலையும் கோயில் சுற்றாடலையும் நோக்கி வீசப்பட்ட விமானக்குண்டுகளிளால் கோயிலுக்கும் அதனை அண்டியிருந்த மடங்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. கோயில் தூபிகள், கலசங்கள், மண்டபங்கள், கூரைகள் என்பவற்றிற்கும் திருக்குளம் நந்தவனம் என்பவற்றிற்கும் ஏற்பட்ட சேதங்கள் அளவிலடங்கா. கோபுரத்துக்கு தென் கிழக்குப் பகுதியில் புட்டணி கோயிலுக்கு அருகாமையிலிருந்த மடம், புல்டோசர் கொண்டு சிதைக்கப்பட்டது. இம்மடம் 1893ம் வருடமளவில் சி.சந்திரசேகரம் அவர்களால் கட்டப்பட்டதாகும் கோபுரத்துக்குக் கிழக்குப் பக்கமாகத் திரு.பொ.தங்கவேலாயுதம் அவர்களால் கட்டப்பட்ட இன்னொரு மடம் 1991 தை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆகாயவிமானத் தாக்குதலால் முற்றாக சேதமாக்கப்பட்டது. கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் தென் மேற்குப் பகுதியில் தெட்சணாமூர்த்திச் செட்டியார் என்பவரால் கட்டப்பட்ட இன்னொரு மடம் இயற்கையினால் ஒரளவு சிதைவுற்றிருந்தது. இந்த மடமும் விமாக்குண்டுவீச்சினால் தரைமட்டமாக்கப்பட்டது. திரு.நா. வேலுப்பிள்ளை எனப்படும் கெச்சுத் தண்டலினால் கோயிலுக்கு மேற்குப்புறமாக 1898ம் வருடம் ஒரு மடம் கட்டப்பட்டது . இந்த மடத்தில் தான் திருக்கல்யாண உற்சவதினத்தன்று பகல்அம்பாள் எழுந்தருளி வந்து தவக்கோலத்தில் இருக்கும் உற்சவம் இடம்பொறுவது வழக்கம். இந்தமடம் வைரக்கற்களால் ஆக்கப் பெற்றமையால் சிறிதளவு சேதங்கள் மட்டுமே ஏற்பட்டன.*

*1989ம் வருடம் ஆடிமாதம் தேவி மஹோற்சவம் ஆரம்பமாகி ஒன்பதாம் நாள் தேர் உற்சவ தினத்தன்று இந்திய இராணுவத்தினரால் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் இறுதி நாள் உற்சவங்கள் பூரணமாக நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது 28.09.2001 அன்று இரவு 9.45 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் கோயில் இரண்டாம் பிரகாரத்தின் அக்கினிமூலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதிக் கூரை முழுவதும் பெறுதிமிக்க இரண்டு மின்பிறப்பாக்கிகள் திருவாடுதண்டுகள் மற்றும் பல தரப்பட் ட கம்புகள் என்பன தீயில் முற்றாக எரிந்து சேதமாகின பொது மக்கள் திரண்டு வந்து தீயை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையால் இதர பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.*

*ஆலயத்தில் 1967ம் வருடம் கடைசியாக நடாத்தப்பட்ட கும்பாபிஷேகத்தின் பின்னர் அடுத்த கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு பலதரப்பட்டஇடைஞ்சல்கள் ஏற்பட்டன. இவற்றுள் நாட்டில் ஏற்பட்ட இனப்பிரச்சினையினால் அத்தியாவசியமான கட்டடப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சுமூகநிலை ஏற்பட்டு பொருட்கள் ஒரளவு தட்டுப்பாடின்றிக் கிடைக்கப் பெற்றதும் திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகத்தை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 04.02.2004 அன்று கும்பாபிஷேகத்தை வைத்து கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டு 07.05.2003 அன்று பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அடியார்கள் பலரின் உதவியுடன் திருப்பணி வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு தைமாதம் 21ம் நாள் 04.02.2004 அன்று புதன் கிழமை பூர்வபட்சமும், திரயோதசித் திதியும், புனர்பூச நட்சத்தததிரமும், சித்த யோகமும் கூடிய சுபவேளையில் வைத்தீஸ்வரப்பொருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் சிவஶ்ரீ.ப.மனோகரக்குருக்கள் அவர்களினால் மஹாகும்பாபிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது. இக்கும்பாபிஷேக நிகழ்வில் தென் இந்தியா, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் வேதவாத்தியார் ஜீ.ஶ்ரீநிவாச சாஸ்திரிகள் சர்வசாதகாசிரியராகப் பங்கேற்றுக் கொண்டது சிறப்பான அம்சமாகும்.*

*இக்கும்பாபிஷேகத்துடன் குண்டு வீச்சுக்களில் சேதமாக்கப்பட்ட இண்டாம் பிரகாரத்திலமைந்த வசந்த மண்டபத்தின் நிலப்பகுதி பளிங்குக் கல்லினால் மாற்றியமைக்கப்பட்டதோடு கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்து சேதமாக்கப்பட்ட மடங்கள் இரண்டும் உரிமையாளர்களினால் புதுப்பித்துக் கட்டப்பட்டன. அத்தோடு மூன்றாம் பிரகாரத்தின் தெற்கு, மேற்கு, வடக்குத் திசைகளில் உட்பக்கச் சுவர்கள் புதிதாக அமைக்கப்பட்டதுடன், ஆலய வட திசையில் அமைந்திருந்த திருக்குளமும் புனரமைக்கப்பட்டது. இரண்டாம் பிரகாரத்தில் வல்வை நடராஜா பெண் வள்ளியம்மாள் அவர்களினால் 1989 பங்குனி மாதம் கட்டப்பட்ட திருக்கல்யாண மண்டபம் மேலும் 20 அடிகள் நீட்டிக் கட்டப்பட்டது. கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை ஆலய பிரதம குருவின் வதிவிடமும் புதிதாகக் கட்டப்பட்டது . மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஆதீனகர்த்தர்களினால் மகா கும்பாபிஷேக சிறப்பு மலரொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.*

*ஆலயத்தில் வருங்காலத்தில் முக்கியாமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுள் மேற்குப் பகுதிக் கோபுரம் அமைக்கப்படுதல், தேவிவாசல் கோபுரம் புதிதாக அமைக்கப்படுதல் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திருக்குளம் ஆழமாக்கபடுதலோடு சேதமாக்கப்பட்ட பகுதி புனரமைக்கப்படுதலுமாகும்.*

*தனித்துவமான சிறப்புக்கள்*

*வல்வெட்டித்துறை சிவன் கோவிலின் சிறப்பம்சங்களை கீழ்வரும் இரண்டு அடிப்படைகளிலும் நோக்குவோம் :*

*ஆலயமும் வழிபாடும்*

*ஆலயத்தை ஸ்தாபித்த பெரியவர் போட்டிக்காகவோ, புகழுக்காகவோ அன்றி தமது மூதாதையர் மூலம் கிடைத்த ஒரு தெய்வ வாக்கிற்கு இணங்கவோ ஆலயத்தை அமைத்ததாக ஆலய வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. இந்த வகையில் ஒரு சிவன் ஆலயம் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்க வேண்டுமோ அவை அனைத்தும் முழுமையாகவும், சிறப்பாகவும் இடம் பெறும் வகையிலும் அதே நேரம் ஐந்து வாசல்கள் கொண்டு ஆகம விதிக்குட்பட்டதாகவும், இவ்வாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.*

*இராஜகோபுரம், மூன்று வீதிகள் என்பவற்றை உள்ளடக்கி எதிர்காலத்திலும் ஆலயத்தின் திருப்பணி தொடர்பான விஸ்தரிப்பு வேலைகளுக்கும், அதே நேரம் பெருமளவில் கூடுகின்ற அடியார் கூட்டத்திற்கும் ஈடு கொடுக்கக்கூடிய விஸ்தீரணத்துடனும், திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தின் எல்லைக்குள்ளேயே ஆலயத்தின் வடக்குத் திசையிலும், தெற்கு திசையிலும் பெரிய குளங்கள் உருவாக்கப்பட்டு அவை திருத்தடாகங்களாக விளங்கிக்கொண்டிருக்கின்றன. அதாவது தென் இந்தியாவில் அரசர்களால் உருவாக்கப்பட்டதற்கு ஈடான அமைப்புடைய ஒரு பிரமாண்டமான ஆலயத்தை எமது மூதாதையர்கள் வல்வை நகரில் அமைத்துள்ளனர். அதே நேரம் வரலாற்றுப்புகழ் மிக்க வல்வை அம்பாள் ஆலயம் இடது பக்கமாகவும், மிகவும் நெருக்கமாகவும் அமைந்துள்ளது.

அதாவது அம்பாள் ஆலயத்தின் தெற்கு வீதி வைத்தீஸ்வர ஆலயத்தின் வடக்கு வீதியாக இருக்கும் வகையில் இந்த ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பே ஒரு தனிச்சிறப்பாகும்.*

*ஆலயத்தின் பூசையை மேற்கொள்கின்ற பிராமணர்களின் பக்குவம் ஈஸ்வரனின் மேல் கொண்டுள்ள பக்தியின் ஆழம் என்பவை ஆலயத்தின் சிறப்பு தொடர்ந்து பேணப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. தற்பொழுது பூசையை மேற்கொள்கின்ற பிராமணர் பரம்பரை நா.குமரசாமி குருக்களுடன் ஆரம்பமாகியது. தற்பொழுது ஆறாவது பரம்பரையினராக பூசையை மேற்கொள்ளும் இந்தப் பிராமண பரம்பரையினர் ஈசனுக்குப் பூசை செய்வதை தமக்குக் கிடைத்த ஒரு பேறாகவே எண்ணிச் செயற்படுவதை காணமுடிகின்றது. அத்துடன் தமது வாழ்க்கையாலும் நடத்தையாலும் வேதாகம அறிவினாலும் சமூக சிந்தனை உள்ள பாங்கினாலும் தலைமைத்துவப் பண்பாலும், இவர்கள் சிறந்தவர்களாக விளங்கி வருகின்றனர். இத்தகைய இயல்புகள் உள்ள பிராமணர் பரம்பரை இவ்வாலயத்திற்கு அமைந்திருப்பது ஆலயத்திற்கு சிறப்பைக் கொடுத்து ஆலயத்தின் பக்தி நிலையை மேலும் மேம்படுத்தும் முக்கிய அம்சமாக விளங்குகின்றது.*

*ஆலயம் ஸ்தாபிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை வைத்தீஸ்வரர் ஆலயம் அறம் தவறாது ஆகம விதிப்படி சரியான நியமங்களுக்கு இணங்க சீராகவும், சிறப்பாகவும் செயற்பட்டுக்கொண்டிருப்பதற்கு ஆலயத்தினை நிர்வகிப்பவர்களின் பங்களிப்பே மிக முக்கிய காரணியாக இருந்து வருவதையும் எம்மால் உணர முடிகின்றது. ஆலயத்தை ஸ்தாபித்த பெரியவர் திருமேனியர் வேங்கடாசலபிள்ளை அவர்கள் தர்மகர்த்தாவாக இருந்து எவ்வாறு முன்மாதிரியாக ஆலயத்தை நிர்வகித்தார்களோ அதே பரம்பரையினர் அதே போன்று இன்று வரை இந்தப் பணியை இறை நம்பிக்கையுடன் , இறை தொண்டாக கருதி அர்ப்பணிப்புடனும், அனைவருக்கும் முன்மாதிரியாகவும் செயற்பட்டுக்கொண்டிருப்பது இந்த ஆலயத்தின் தனித்துவம் இன்னும் காப்பாற்றப்படுவதற்கு மிகமுக்கிய காரணமாகும். இவ்வாறு ஆலயத்தை நிர்வகிக்கின்ற இந்த அறங்காவலர்கள் குடியிருக்கும் அக்கிரகாரம் என்ற அந்த குடியிருப்புப் பகுதி ஆலயத்துடன் இணைந்த வகையில் அமைந்திருக்கும் சிறப்பையும் நாம் இங்கு காணலாம். ஆலயத்தில பூசையை மேற்கொள்ளும் பிராமணர்களுக்கும், நிர்வாக அறங்காவலர்களுக்கும் இடையில் பேணப்பட்டு வரும் சமூகமான உறவினால் தான் இந்த ஆலயம் இவ்வாறான தனித்துவத்தையும், சிறப்பையும் தொடர்ந்தும் பேணமுடிகின்றது என்பதை இவ்விடத்தில் நாம் குறிப்பிடுதல் பொருத்தமானதாகும். உதாரணமாக ஆலயம் பாலஸ்தாபனம் செய்த பொழுதே கும்பாவிசேகத்திற்குரிய திகதியும் குறிக்கப்பட வேண்டுமென்று அறங்காவலர்களின் கருத்திற்கு ஆலயத்தின் பிரதம குருக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அதற்கேற்ற வகையில் திகதி குறித்து இரண்டு பகுதியினரும் ஒருமித்த மனதுடன் அதை நிறைவேற்ற கடினமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிறப்பை இங்கே காணமுடிகின்றது.*

*ஆலயம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை தூய சைவ முறைப்படியான வழிபாட்டு ஆசார முறைகள் அடியவர்களால் இன்றும் இந்த ஆலயத்தில் இறுக்கமாக பின்பற்றப்பட்டு வருவதும் இந்த ஆலயத்திற்கே உரிய இன்னனொரு தனித்துவமான சிறப்பாகும். காலத்தால் ஏற்படுகின்ற நவீன நாவரீக மாற்றங்கள் எதுவும் இவ்வாலயத்தில் ஊடுருவுவது இல்லை. கால மாற்றங்களுக்கு அப்பாற்பட்டு பூசை முறைகளும், வழிபாட்டு முறைகளும் தொடர்ந்தும் இவ்வாலயத்தில் எவ்வித மாற்றமுமின்றி பேணப்பட்டு வருவதை அனைவரும் வியப்புடன் நோக்குவதை காண்கின்றோம். அதாவது ஆலயம் மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்குரிய இடமாகவே பேணப்பட வேண்டுமென்பதை வெளிப்படுத்துகின்ற ஆலயமாக இவ்வாலயம் விளங்கிக் கொண்டிருப்பது சமய ஆர்வலர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இவ்வாறான ஒரு ஆன்ம ஈடேற்ற நோக்கத்துடனும், சமய ஈடுபாட்டுடன் மட்டுமே இந்த ஆலயத்தின் அடியார்கள் கூடுவது இந்த ஆலயத்திற்கு மட்டுமன்றி சைவ உலகத்திற்கே சிறப்பையும், உயர்வையும் கொடுக்கும் ஒரு விடயமென்றால் அது மிகையாகாது.*

*ஆலய வழிபாட்டில் தூப, தீப, பாராயணம் ஆகிய மூன்று விடயங்களும் முக்கியமானவையே. இதில் தூப, தீப விடயங்கள் மட்டுமன்றி பாராயணம் என்ற விடயமும் அன்று தொடக்கம் இன்று வரை இந்த ஆலயத்தில் பக்தி உணர்வுடன் மேற்கொள்ளும் சிறப்பும் இங்கே இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.*

*பூசை முறைகளும் உற்சவ செயற்பாடுகளும*

*ஆறுகாலப் பூசை உட்பட ஒரு சிவன் ஆலத்தில் இடம் பெற வேண்டிய அனைத்து வகையான பூசைகளும், எல்லா வகையான சிறப்புக்களுடனும் இடம் பெறுகின்றன.*

*வருடாந்த மகோற்சவத்தின் போது இடம்பெறும் பஞ்சரத தேர்த்திருவிழா, சமுத்திரத் தீர்த்தம், கல்யாணத் திருவிழா என்பன ஆலயத்தின் சிறப்பை வெளிக்காட்டுகின்றன.*

*மகோற்சவம்*
*பங்குனி மாத பௌர்ணமி நட்சத்திரத்திற்கு முதல் 15 நாட்கள் பிரமோற்சவம் எனப்படும் மகோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். மகோற்சவ முதலாம் கிரியை ஆலய வாமபாகத்திலுள்ள கிராம தேவதையான ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தனது சிங்க வாகனத்தில் திரு வீதி உலா வருவார். மறுநாள் ஊரின் மூலைமுடுக்கு எல்லாம் வாதவூரர் சிவபெருமான் ஆணைப்படி சென்று மகோற்சவத்தை அறிவித்து ஓர் ஊர்வலம் செல்லும்.*

*பின்னர் அமாவாசைத் திதியில் கொடியேற்றத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும் அன்று மாலை விநாயகருக்கு சிறப்பு யாகம் ஆரம்பித்து முதல் மூன்று நாள் உற்சவம் நடைபெற்று விநாயகருக்கு மூர்த்தி கரத்தை அதிகரிக்கப்படும். பின்னர் மூன்று நாட்கள் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கும் உற்சவம் நடைபெற்று கடைசி நாள் தீர்த்தோற்சவம் நடைபெறும்.*

*7ம் நாள் மாலையில் மகாயாகம் சிவபெருமானுக்கு தொடங்கி சிவபெருமான் அம்பாள் சகிதம் விநாயகர் முருகன் சண்டேசுவரர் சகிதம் வசந்த மண்டபத்தில் விஷேட சோடசோபன பூசையுடன் மகா ஆசீர்வாதம் நடைபெற்று சந்திரசேகரப் பட்டம் மூலமூர்த்தி சார்பாக பிரதம குருவால் சூட்டப்படும். இப்படியாக திருவிழாக்கள் நடைபெற்று இறுதி நாள் தீர்த்தோற்சவத் தினமான பங்குனி பூரணயில் நடராஜருக்கு விஷேட அபிஷேகம் நடைபெற்று நடராஜர் சகிதம் திருவீதி வலம் வருவார்.*

*பின் சுவாமி அம்பாள் வெள்ளி இடப வாகனத்தில் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகன் சண்டேஸ்வரர் 11ஃ2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஊறணி சமுத்திர தீர்த்தமாடி பின் நெடியகாட்டில் உள்ள திருச்சிற்றம்பல பிள்ளளையார் ஆலயத்தில் தங்கி மாலை இறைவன் இறைவியை மணம் முடித்து பங்குனி உத்தர பௌர்ணமியை சித்தரிக்கும் நாள் திருமணகோல காட்சியுடன் ஆலயம் திரும்புவார். அதன் பின் பிராயச்சித்த அபிஷேகம் முடிந்த பின் கொடியிறக்கம் நடைபெறும். அதன் மறுநாள் ஊடல் திருவிழா நடைபெறும்.*

*தீர்த்தோற்சவத்துக்கு மறுநாள் சுந்தரருக்காக சுவாமி பரவையாரிடம் தூது சென்ற சம்பவத்தையிட்டு அம்மன் சுவாமி ஊடல் நடக்கும் சுந்தரர் சுவாமிக்காக அம்மனிடம் தூது சென்று ஒற்றுமையாக்குவார். இரவு அம்மன் உற்சவம் நடைபெறும்*

நோய் தீர்க்கும் குன்றக்குடி குமரன் கோவில்

#ஆலயதரிசனம்...

நோய் தீர்க்கும் 
குன்றக்குடி குமரன் கோவில்..

இன்று குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் வழங்கப் பெறும் இத்திருத்தலம் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிறது.

நோய் தீர்க்கும் குன்றக்குடி குமரன் கோவில்..

கி.பி. 1780-களில் சிவகங்கைச் சீமையை அரசாண்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் பல்வேறு கட்டங்களில் சுதந்திரப் போர் புரிந்து, இறுதியில் 1801-ல் துக்கிலிடப்பட்டவர்கள் பெரிய மருதுவும், அவர் தம்பி சின்ன மருதுவும்.

பிளவை நோய் தீர்த்த விபூதி..

ஒருமுறை பெரிய மருதபாண்டியருக்கு பிளவை என்னும் நோய் ஏற்பட்டு, எவ்வளவு ராஜ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. வலி அதிகமாக இருந்ததால் துடித்துப் போனார்.

இந்த நிலையில் பெரிய மருதுவைப் பார்க்க வந்த ஒருவர், ‘ஒரு முருக பக்தர் வந்து, பிரார்த்தித்துக் கொண்டு திருநீறு பூசினால் குணமாகும்’ என்று தெரிவித்தார்.

உப்பு வாணிகம் செய்து கொண்டிருந்த காடன் செட்டியார் என்பவரை அழைத்து வந்தார்கள். அவர் தனது குலதெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு விபூதி பூசிவிட்டு கூட இருந்து உதவினார். ஓரிரு தினங்களில் பிளவைக் கட்டி உடைந்து வலி நீங்கியது.

இது புராணக் கதையல்ல.. வரலாற்று நிகழ்வு. ‘வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே’ என்ற குன்றக்குடி பாமாலையில் வரும் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

நோய் குணமான நெகிழ்ச்சியில் இருந்த பெரிய மருது, காடன் செட்டியாரின் குலதெய்வமான குன்றக்குடி ஆறுமுகனைப் பார்க்க விரும்பினார். சுற்றிலும் புதர் மண்டி, கவனிப்பின்றி இருந்த குன்றக்குடி மலைக் கோவிலைப் பார்வையிட்டு, திருப்பணிகளை செய்யத் தொடங்கினார். தாம் வந்து தங்கி பணிகளைப் பார்வையிட வசதியாக குன்றக்குடியில் ஒரு சிறிய அரண்மனையையும் நிறுவினார்.

திருப்பணிகள் செய்த மருதுசகோதரர்..

திரு வீதிக்குத் தென்திசையில் உள்ள தீர்த்தக் குளத்தை செப்பனிட்டு, படித்துறைகள் கட்டி, சுற்றிலும் தென்னை மரங்களை நட்டு வைத்தார். அதற்கு ‘மருதாவூரணி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

மூலவரின் பீடத்தின் கீழ் மாறியிருந்த எந்திரத் தகட்டை செப்பனிட்டு சாத்தினார். மூலவர் சன்னிதியில் மயில் மண்டபம், உற்சவர் சன்னிதியில் அலங்கார மண்டபம் மற்றும் சுற்றுச் சுவர்களை கட்டினார். அங்குள்ள ராஜ கோபுரமும் பெரிய மருதுவால் கட்டப்பட்டதே ஆகும். அடிப்பகுதியில் மருது பாண்டியன் உபயம் என்று பொறித்து, ஒரு தங்க கவசம் செய்து உற்சவ மூர்த்திக்கு சாத்தினார். தேர் செய்து, தைபூச விழாவினைப் பெரிய அளவில் நடத்தினார். காடன் செட்டியார் பெயரில் மண்டகப்படி ஏற்படுத்தி, அன்னதானச் சத்திரமும் கட்டினார் என்று தல வரலாறு கூறுகிறது.

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரரையே தனது வழிபடு தெய்வமாகக் கருதி, அங்கே ஒன்பது நிலை ராஜகோபுரம் அமைத்திருந்த மருது சகோதரர்கள், குன்றக்குடி சண்முகநாதரிடம் தீராத அன்பு கொண்டு திருப்பணிகள் செய்து உற்சவமூர்த்திக்கு எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தின் இரு தூண்களிலும் கூப்பிய கரங்களுடன் சிலை வடிவமாக இன்றும் காட்சி தருவது காலத்தால் அழியாத கலைச் சின்னமாகும். சிலைக்கு கீழே பிளவை நோய் தீர்த்த பெருமை கல்வெட்டில் காணப்படுகிறது.

ஆலய அமைப்பு..

இன்று குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் வழங்கப் பெறும் இத்திருத்தலம் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிறது. இதற்குக் காரணம், தொலைவில் நின்று பார்க்கும் போது, குன்றானது நிமிர்ந்து நிற்கும் மயில் போலத் தோற்றமளிப்பதே ஆகும்.

முருகப்பெருமானின் வாகனமாகிய மயில், தனது ஆணவத்தால் சாபம் பெற்றிருந்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும் வேலவன் இவ்வூருக்கு வந்து மயிலுக்கு சாப விமோசனம் கொடுத்து மலைமேல் குடி கொண்டதாகப் புராணக்கதை சொல்கிறது.

குன்றக்குடியில், மலைக் கோவில், கீழ் கோவில் என்றும் இருபகுதிகள் உள்ளன. கீழே குடைவரைக் கோவிலில் தேனாற்று நாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி காட்சித்தருகிறார்கள். அவர்களுக்கு அருகில் சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்தீசர், சண்டேசர் சிலை வடிவங்கள் உள்ளன.

மலையின் நுழைவு வாசல், மயிலின் தோகை போல் தோன்றுவதால், அங்கே உள்ள பிள்ளையார் ‘தோகையடி விநாயகர்’ என்று போற்றப்படுகிறார். அவரை வழிபட்டுவிட்டு மலை ஏறத் தொடங்கினால், மேலே முருகனுக்கு காவடி எடுத்த இடும்பன் சன்னிதி உள்ளது. சற்று தள்ளி இடப்புறம் தேவியோடு தோன்றும் வல்லப கணபதி காட்சித்தருகிறார். மலைக் கோவில் வாசலில் முருகனின் படைத்தளபதி வீரபாகு நம்மை வரவேற்கிறார்.

தலைவாசலில் தெற்குநோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. மலை மீது கோவிலில் ஒளி பிரகாரம்தான் உள்ளது. அதில் நால்வர், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் ஆகியோர் சன்னிதிகளும், சோமாஸ்கந்தர், விசாலாட்சி சன்னிதிகளும் வடகிழக்கில் நவக்கிரக சன்னிதியும் விளங்குகிறது.

கருவறையில் கிழக்கு நோக்கியபடி மூலவர் ‘சண்முகநாதர்’ என்ற பெயர் பெற்று, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, சுகாசன நிலையில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்டும், நிற்கும் மயில் மீது வீற்றிருப்பது போல் இருக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்களில் முருகனுக்கு இருபுறமும் தேவியர் இருவரும் நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே வலதுபுறம் வள்ளியும், இடதுபுறம் தெய்வானையும் தனித்தனியாக மயில்களின் மீது இருப்பது வேறெங்கும் காணமுடியாத தோற்றமாகும்.

இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது பிரசித்தி பெற்றது.

பல குடும்பங்களுக்குக் குல தெய்வமாக விளங்கும் சண்முகநாதப் பெருமானிடம், மக்கள் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து ‘நீயே காப்பு’ என்று தத்து கொடுத்துச் செல்வது அவர்களின் நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது.

ஆதீனகர்த்தரின் கட்டுப்பாட்டில் இயங்கும், குன்றக்குடி சண்முகநாத சுவாமி திருக்கோவில், தினமும் காலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

மருது பாண்டியரின் பிளவை நோய் மட்டுமல்ல, மக்களின் பிணிகளையும், கவலை களையும் போக்க வல்ல அருணகிரிநாதர் பாடிய குன்றக்குடி குமரனை, நாமும் மலை ஏறிச் சென்று மனமாற தரிசிக்கலாமே.

அமைவிடம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் காரைக்குடியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது, குன்றக்குடி. திருமயம் - திருப்பத்தூர் சாலையில் இருந்தும் செல்லலாம். கற்பகவிநாயகர் அருள்பாலிக்கும் பிள்ளையார் பட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்தான், குன்றக்குடி குமரன் இருக்கிறார்...

புதன், 26 அக்டோபர், 2022

மயிலம்முருகன் கோயில்

#ஆலயதரிசனம்...

மயிலம்
முருகன் கோயில்...

திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.

மூலவர்:
முருகன் சுப்பிரமணியர்

கோயிலின் வரலாறு..

ஆலயத்திலிருந்து காணப்படும் ஊரின் தோற்றம் மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும்.இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்த கோயில் ஆகும். சோழமண்டல கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது. இது பிராமணர்களுக்கு நன்கொடை அளித்த கிராமமாக இருந்தது.

சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது. சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தியும் தோல்வியுற்றார். இதன் பிறகு, சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி கண்ணீர் மல்க வேண்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கண்ணீருடனான வேண்டுதலால் மனம் மாறிய முருகக்கடவுள் மயில மலை அருகே வராகா ஆற்றங்கரையில் மயில் வடிவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. 

மேலும், சூரபத்மன் தான் அவ்வாறு தவம் செய்து மயில் வடிவத்தைப் பெறும் போது அதே மலையில் முருகன் நிரந்தரமாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. முருகன் அதற்கு இசைவு தெரிவித்ததாகவும், அதனால், இந்த மலை மயிலமலை என்றும் இந்த இடம் மயிலம் என்றும் குறிப்பிடப்படுவதாக தல வரலாறுகள் குறிப்பிடுகின்றன. 

மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பான அளவில் கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் நிறுவப்பட்ட மடம் கோவிலின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

முருகனால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்ட போது அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி இந்தப்பகுதிக்கு வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்ததாகவும், தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்ததாகவும், அப்போது சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என முருகனிடம் வேண்டியதாகவும் மற்றொரு புராணத்தகவல் கூறுகிறது. 

மயில் வடிவ மலையாக இருந்து தான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் விளங்க வேண்டும் எனவும் முருகன் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் சூரபத்மன் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு முருகன் அவனிடம், ‘‘எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்ததாகவும் கூறப்படுகிறது. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

திருவிழா ..

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

திறக்கும் நேரம்...
காலை 6 மணி முதல் 12மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்...

செவ்வாய், 25 அக்டோபர், 2022

இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது

இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தென்படும். மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். மொத்தம் 1 மணி 45 நிமிடங்கள் சூரிய கிரகணம் தென்படும். மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

➦5 பிரிவுகளாக பிரிந்த சூரியன்

➦நிறபிரிகை மற்றும் ஒளி வட்டத்தால் 5 பிரிவுகளாக பிரிந்து அபூர்வமாக காட்சி அளிக்கும் சூரியனின் தோற்றம்

➦இடம் : சுவீடன் வனப்பகுதி


விதிகள் – இந்த விதிகளானது எந்த காலத்திலும் பின்பற்ற வேண்டியவை:
[1] வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.
[2] அதற்கென இருக்கக்கூடிய கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கலாம்.
[3] கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது.
[4] கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது.
[5] முடிந்தவரை குலதெய்வத்தையும் – முன்னோர்களையும் – இஷ்ட தெய்வத்தையும் வணங்குதல் நலம்.
[6] 1 வயதிற்கு குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது.
[7] கிரகணம் முடிந்தவுடன் வீட்டினை கோமியம் – மஞ்சள் பொடி கலந்த நீரினால் சுத்தம் செய்வது நன்மை தரும்
[8] கிரகணத்திற்கு பிறகு எந்தெந்த நக்ஷத்ரகாரர்களுக்கு பிடித்திருக்கிறதோ அவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்
[9] கிரகணம் நடக்கும் போது உணவுப் பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வைத்திருப்பது நலம் பயக்கும்.
[10] கிரகணம் ஆரம்பிக்கும் போது தர்ப்பணம் செய்ய வேண்டும்.

சூரிய கிரகணத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், காளகஸ்தி சிவன் கோயில்கள் திறப்பு.

சூரிய கிரகணத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், காளகஸ்தி சிவன் கோயில்கள் திறப்பு.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது. எனவே சூரிய கிரகணத்தின் போது அண்ணாமலையார் கோவில் நடை அடைக்காமல் வழக்கம் போல் திறந்து இருக்கும். 

பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணத்தின் போது கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணத்தின் போது கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். 

அதன்படி வருகிற 25ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் தொடங்கும் போது கோவில் வளாகத்தில் 4ஆம் பிரகாரத்தில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

காளகஸ்தி சிவன் கோவில்: காளஹஸ்தி கோவில் இதே போல ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நாட்டிலுள்ள மிகப் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும். மேலும் அடிப்படையில் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு, கேது க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் உள்ள சிவன் சிலை அனைத்து 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 ராசிகளையும் உள்ளடக்கியது. இதனாலேயே இந்த சிவனுக்கு சூரிய மண்டலம் முழுவதையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. 

ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு கேது பரிகார தலமாக உள்ளது. எனவே கிரகணத்தால் கோவிலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய, சந்திர கிரகணத்தன்று சிவபெருமானையும், ஞான பிரசுனாம்பா அம்பாளையும் வழிபட்டால், ஒரு நபர் அவர்களின் ஜாதக தோஷங்களிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்தியாவில் சூரிய கிரகணம்

இந்தியாவில் சூரிய கிரகணம்: 
தமிழகத்தில் 8% மட்டுமே தெரிந்தது.

சென்னை: இந்தியாவில் பல பகுதிகளில் சூரிய கிரகணம் தெரிந்தது.

இதனை மக்கள் பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக பார்த்து ரசித்தனர். தமிழகத்தில் 8 சதவீதம் அளவிற்கு மட்டுமே சூரியன் மறைப்பு நிகழ்ந்தது.

பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. ‛பகுதி சூரிய கிரகணம்' இன்று (அக்.,25) இந்தியா, ரஷ்யா, கஜகிஸ்தான், வட அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தியாவில் மும்பை, டில்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரகணம் மாலை 5 மணியளவில் பல பகுதிகளில் தெரிய துவங்கியது.

சென்னையில் மாலை 5:13 மணிக்கு கிரகணம் தெரிந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை 8 சதவீதம் மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சில நிமிடங்களுக்கு மட்டும் மேற்கு வானில் சூரிய கிரகணம் தெரிந்தது.

இதனை மக்கள் அதற்கேற்ற பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக பார்த்து ரசித்தனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

கந்தசஷ்டி சஷ்டிஆரம்பம் விரதமிருப்பது எப்படி?

கந்தசஷ்டி சஷ்டி ஆரம்பம் :

விரதமிருப்பது எப்படி?

* கந்தசஷ்டி விரத துவக்கநாளான அக்.25 முதல் தினமும் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையில் இருப்பவர்கள் பால், பழம், பழச்சாறு என எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.

* முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களை ஜபிப்பது அவசியம். 

திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களை காலையும், மாலையும் பாராயணம் செய்ய வேண்டும்.

* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுங்கள்.

* கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.

உதாரணம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.

* மலைக்கோயில்களை வலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.

* ஆறுநாட்களும் விரதமிருந்தால் புத்திர தோஷம் விலகும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

தாகம் தீர்த்த வேலாயுதம்
திருச்செந்துாரில் உள்ள நாழிக்கிணற்றில் உள்ள தண்ணீர், கடலுக்கு அருகில் இருந்தாலும் உப்பு கரிப்பதில்லை. ஆனால் இந்த கிணறைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளில் உப்பு நீரே கிடைக்கிறது. 

ஆனால் நாழிக்கிணற்றில் மட்டும் சுவையான நீர் கிடைக்க காரணம் என்ன தெரியுமா... சூரபத்மனுடன் போரிட்ட வீரர்கள் தாகத்தால் சிரமப்பட்டனர்.

அப்போது முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தமே இந்தக்கிணறு.

புதன், 19 அக்டோபர், 2022

முந்திரி பிஸ்க

 *முந்திரி பிஸ்கட்*       

 *தேவையான பொருள்கள்*         

மைதா - 150 கிராம், வெண்ணெய் அல்லது டால்டா - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 75 கிராம், பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி, முந்திரி பருப்பு - 10         

 *செய்முறை*         

   முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் டால்டா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து கலக்கவும். பிறகு பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். இறுதியில் மைதா மாவை சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை ஒரு ஏர்டைட் கன்டைனரில் போட்டு மூடி 2 மணி நேரம் வைத்திருக்கவும்.2 மணி நேரம் கழித்து பிசைந்து வைத்த மாவை எடுத்து சப்பாத்தியை போல் தேய்க்கவும்.சப்பாத்தியை போல் தேய்த்த மாவை வட்டமான பிஸ்கட்களாக வெட்டி எடுக்கவும்.மைக்ரோவேவ் சேஃப் ப்ளேட்டில் பிஸ்கட்களை அடுக்கி அதன் மேல் முந்திரியை வைத்து லேசாக அழுத்தி விடவும். கன்வெக்ஷனில் 200 டிகிரி சூட்டில் 10 அல்லது 12 நிமிடங்கள் வேக விடவும்.பிஸ்கட்கள் பேக் ஆனதும் எடுத்து விடவும்.

ஓட்ஸ் ஆலு பர்பி

 *ஓட்ஸ் ஆலு பர்பி*     

   *தேவையான பொருள்கள்*         

ஓட்ஸ் - ஒரு கப், உருளைக்கிழங்கு மசித்தது - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், சீனி - 3 கப், பால் பவுடர் - ஒரு கப், ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி, நெய் - 2 மேசைக்கரண்டி       

   *செய்முறை*           

 முதலில் ஓட்ஸை வெறும் வாணலியில் சிறிது கலர் மாறும் வரை 2 நிமிடம் வறுக்கவும். ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.பின் தேங்காய் துருவலை வெறும் வாணலியில் ஈரம் போக வதக்கி பொடிக்கவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து மிக்ஸியில் மசிக்கவும்.ஓட்ஸ், தேங்காய் துருவல், உருளைக்கிழங்கு, சீனி இவற்றை நன்றாக கலந்து மைக்ரோமீடியமில் 10 நிமிடம் வைக்கவும். இடையிடையே கலந்து விடவும். ஓரளவிற்கு கலந்து வெந்ததும் இதனுடன் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் மைக்ரோ மீடியமில் வைக்கவும்ஒட்டாமல் சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி விரும்பிய வடிவங்களில் வெட்டவும்

சுழியம்

*சுழியம்*       

 *தேவையான பொருள்கள்*       

  கடலை பருப்பு - கால் கிலோ, அச்சு வெல்லம் - கால் கிலோ, மைதா - 200 கிராம், சீனி - 2 தேக்கரண்டி, தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - கால் லிட்டர்         

 *செய்முறை*           

 முதலில் கடலை பருப்பை முக்கால் பதம் வேக வைத்து வடிகட்டவும்.தேங்காய் பூவை வாணலியில் வதக்கி எடுத்து வைக்கவும்.வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும் (இதற்கு பதம் தேவையில்லை)வடிகட்டிய கடலை பருப்பை மிக்ஸியில் பொடிக்கவும். தேங்காய் துருவலையும் ஒரு சுற்று விட்டு சேர்க்கவும். ஏல பொடியையும் சேர்க்கவும்.பொடித்து வைத்த பூரணத்தில் வெல்ல பாகை சேர்த்து கெட்டியாக உருட்டும் பதத்துக்கு பிசையவும்.மைதா மாவில் சிறிதளவு உப்பு, சீனி சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எலுமிச்சைபழ அளவு பூரணம் எடுத்து உருட்டி மைதா மாவில் தோய்த்து போடவும்.சுவையான சுழியம் தயார்.

மைதா கஜூர்

 *மைதா கஜூர்*     

   *தேவையான பொருள்கள்*         

மைதா - ஒரு பெரிய கப், சர்க்கரை - அரை கப், வெண்ணெய் அல்லது டால்டா - நூறு கிராம், ரவை - ஒரு கைப்பிடி அளவு, பால் - தேவைக்கேற்ப, ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிது, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு         

 *செய்முறை*           

 தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.மைதாவில் ரவை உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.மைதா ரவை கலவையில் வெண்ணெய சேர்க்கவும்.வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும். பிடித்தால் கொழுக்கட்டை பதம் வரும். அப்பொழுது ஏலக்காய், சர்க்கரை சேர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக பாலை தெளித்து பிசையவும்.சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து பதினைந்து நிமிடம் ஊற விடவும்.பின்னர் அதில் கொஞ்சம் மாவை எடுத்து சப்பாத்தி போல் இல்லாமல் சிறிது கனமாக வளர்த்தி விரும்பிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்திருக்கும் துண்டுகளை எடுத்து போட்டு சிவக்க பொரிக்கவும்.கஜூர் ரெடி. ஆறியதும் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

ரவா கச்சிக்கா

*ரவா கச்சிக்கா*     

   *தேவையான பொருள்கள்*         

மைதா - 2 கப், ரவை - ஒரு கப், சீனி - ஒரு கப், ஏலக்காய் - 6, கொப்பரை தேங்காய் - 1, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு       

   *செய்முறை*           

 ரவையை வறுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.மைதாவை சலித்து உப்பு சேர்த்து பூரிக்கு மாவு போல பிசைந்து வைக்கவும்ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை, துருவிய தேங்காய், சீனி மற்றும் பொடித்த ஏலக்காயை சேர்த்து கலந்து வைக்கவும்.பிசைந்து வைத்த மைதாவில் சிறு உருண்டை எடுத்து பூரிகளாக தேய்த்து நடுவில் ரவா பூரணத்தை வைத்து ஓரங்களை நீர் தொட்டு மூடி விடவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் கச்சிகாவை போட்டு பொரித்து எடுக்கவும்.மாலை நேர சிற்றுண்டிகளாகவும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பவும், சுவையான ரவா கச்சிக்கா தயார். கொப்பரை தேங்காயில் தான் அதிக வாசனை கிடைக்கும். மீந்து போன பூரி மாவில் இது போல் செய்து அசத்தலாம்.

நாட்டுக்கோழி சாப்ஸ்

*நாட்டுக்கோழி சாப்ஸ்*

தேவையானவை:
நாட்டுக்கோழிக் கறி - 500-600 கிராம்
நல்லெண்ணெய் - 100 மில்லி
சோம்பு - ஒரு கிராம்
பட்டை - ஒரு கிராம்
கிராம்பு - ஒரு கிராம்
அன்னாசிப்பூ - ஒரு கிராம்
ஏலக்காய் - ஒரு கிராம்
பிரிஞ்சி இலை - ஒரு கிராம்
வெந்தயம் - ஒரு கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு விழுது - 30 கிராம்
இஞ்சி விழுது - 20 கிராம்
மஞ்சள்தூள் - 2 கிராம்
தக்காளி - 100 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
மிளகாய்த்தூள் - 30 கிராம்
கறிவேப்பிலை - 2 கிராம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் மசாலா - 50 கிராம் 
(துருவிய அரை மூடி தேங்காய், முந்திரி-20 கிராம், கசகசா-10 கிராம் இவற்றை எல்லாம் மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும்)

நாட்டுக்கோழி மசாலா:
சோம்பு - 4 சிட்டிகை
சீரகம் - 3 சிட்டிகை
மிளகு - 15 கிராம்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
(இவற்றை வெறும் சட்டியில் வறுத்து அம்மியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.)

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். சிவந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியவுடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். பிறகு மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நாட்டுக்கோழி மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் நாட்டுக்கோழியைச் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு சேர்க்கவும். இத்துடன் தேங்காய் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கோழியை வேகவைத்து, சரியான பதத்தில் அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

ரோஸ் ஜிலேபி

*ரோஸ் ஜிலேபி*

*திபாவளி ஸ்பெஷல்*

தேவையானவை: 

மைதா மாவு - 100 கிராம், சோள மாவு - 25 கிராம், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், கடைந்த தயிர் - 50 கிராம், சர்க்கரை - ஒரு கப், ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், ஆரஞ்சு அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - தேவையான அளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 250 கிராம்.

செய்முறை: 

சர்க்கரையில் அரை கப் நீர் சேர்த்து, சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கம்பிப் பதம் வந்தபின் இறக்கி, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு தயிர், சோடா உப்பு, சிறிதளவு ஃபுட் கலர் ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து இட்லி மாவு போல் கரைக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய துளையிட்டு, சூடான எண்ணெயில் சிறிய வட்டமாக 3 அல்லது 4 முறை சுற்றி பிழிந்துவிட்டு பொரித்தெடுக்கவும். இதை சர்க்கரை பாகில் முக்கி எடுத்து, ஒன்றின் மீது ஒன்று படாதவாறு தட்டில் வைக்கவும்.

மசாலா ஓமப்பொடி

மசாலா ஓமப்பொடி

*திபாவளி* 
*ஸ்பெஷல்*

தேவையானவை: 

கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், சோம்பு பொடி (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, ஓம வாட்டர் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், பட்டை - லவங்கம் - சோம்பு பொடி, நெய்... இவற்றோடு ஓம வாட்டர் சேர்த்து, மேலும் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசையவும். மாவை முறுக்குக் குழாயில் ஓமப் பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

நட்ஸ் பர்ஃபி

நட்ஸ் பர்ஃபி

 *தேவையான பொருள்கள்*        

 கன்டென்ஸ்டு மில்க் - 100 கிராம், கருப்பு பேரீட்சை பழம் - 6, முந்திரி - 10, திராட்சை - 10, பாதாம் - 10, அக்ரூட் - சிறிது, அத்திப்பழம் - 3, பிஸ்தா - சிறிது, வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி         

 *செய்முறை*           

 மேலே குறிப்பிட்டுள்ள உலர்ந்த பருப்பு வகைகளை தயாராக எடுத்து வைக்கவும்.கருப்பு பேரீட்சைப்பழத்தை பொடியாக நறுக்கவும். திராட்சையை தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக பொடிக்கவும்.வெண்ணெயை ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி அதில் நறுக்கிய பேரீட்சம் பழத்தை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். வதங்கியதும் திராட்சையை சேர்த்து வதக்கவும்.இதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறவும்.இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பிறகு அதில் பொடித்த நட்ஸ் வகைகளை சேர்த்து கிளறவும்.ஒரு தட்டில் நெய் தடவி இதை கொட்டி அழுத்தி வைக்கவும். சற்று ஆறியதும் ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வைத்து எடுத்து விரும்பிய வடிவில் வெட்டவும். மிக சுலபமாக, விரைவில் செய்ய கூடிய, சத்தான இனிப்பு இது.விரும்பினால் இதில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொரி கூட சேர்க்கலாம். இப்படி தட்டில் கொட்டி வெட்டாமல், பட்டர் பேப்பரில் வைத்து உருட்டி ஃபிரிட்ஜில் வைத்து எடுத்ததும் வட்ட வடிவிலும் வெட்டி எடுக்கலாம். அல்லது லட்டு போலவும் பிடிக்கலாம்.

தேங்காய் லட்டு

தேங்காய் லட்டு

 *தேவையான பொருள்கள்*        

 கன்டென்ஸ்டு மில்க் - ஒரு கப், டெஸிகேட்டட் கோக்கனட் - 1 1/2 கப் + 1/2 கப், ஏலக்காய் தூள், நட்ஸ் - விருப்பத்துக்கு         

 *செய்முறை*           

 கன்டென்ஸ்டு மில்கை ஒரு நாண்-ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.இதில் 1 1/2 கப் அளவுள்ள தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, மீதம் உள்ள அரை கப் துருவலை எடுத்து வைக்கவும்.கலவை சற்று சூடு குறைந்ததும் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும். சுவையான சுலபமான தேங்காய் லட்டு தயார்.தேங்காய் லட்டு பல வகை உண்டு. கன்டென்ஸ்டு மில்குக்கு பதில் பால் சேர்த்தும் செய்யலாம். அப்படி செய்தால் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதில் இன்னும் சுவையும், ஆரோக்கியமும் சேர்க்க விரும்பினால் தேங்காய் துருவல் சேர்க்கும் போது முந்திரி, பாதாம் போன்றவை பொடித்து சேர்த்து கிளறலாம். கலர் சேர்க்க விரும்பினாலும் சேர்க்கலாம். மேலே பிரட்ட டெஸிகேட்டட் கோக்கனட் சேர்ப்பதால் சில நேரம் மேல் பகுதி ட்ரையாக இருப்பது போல் இருக்கலாம். அதை விரும்பாவிட்டால் ஃப்ரெஷ் தேங்காய் துருவல் சேர்க்கலாம். ஆனால் அதை ஒரே நாளில் செலவு செய்துவிட வேண்டும். பிரட்ட பயன்படுத்தும் துருவலோடு நட்ஸ் வகைகள் பொடித்து சேர்த்தால் பார்க்கவும் அழகாக இருக்கும், சுவையாகவும் இருக்கும். கன்டென்ஸ்டு மில்க் சேர்ப்பதால் கலவை தயாரானதும் சூடான பாத்திரத்தை விட்டு எடுத்து விடவும், இல்லையெனில் பாத்திரத்தில் படும் கலவை சிவந்து போகும்.

கிரிஸ்பி கோவைக்காய்

*கிரிஸ்பி கோவைக்காய்** 

தேவையான பொருட்கள்

கோவைக்காய் – ஒரு கப் (வட்டமாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

சோள மாவு – இரண்டு டீஸ்பூன்

பார்லி பவுடர் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

வெங்காயம் – ஒன்று (நிளமாக நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – தேவைகேற்ப


செய்முறை
ஒரு கிண்ணத்தில் நறுக்கிய கோவைக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, பார்லி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோவைக்காய் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பின், அதில் உப்பு சேர்த்து குலுக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து கலக்கி பரிமாறவும்.

வரகு சீப்பு சீடை

*தீபாவளி ஸ்பெஷல்..!!*

*வரகு சீப்பு சீடை*

தேவையானவை: வரகு அரிசி மாவு – 1 கப், உளுத்தம் மாவு – கால் கப், கடலை மாவு – கால் கப், தேங்காய்ப்பால் – கால் கப், வெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.

*செய்முறை:*

ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் தேங்காய்ப்பாலை லேசாக சூடு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி நன்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
முறுக்கு சீடை சீப்பு சீடைக்கான அச்சைப் போட்டு மாவை உள்ளே வைத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் பிழிந்துவிடவும். பிழிந்த மாவை சிறியதாக கட் செய்து, கட் செய்தவற்றின் இரண்டு ஓரங்களையும் ஒட்டிவிட வேண்டும். பார்ப்பதற்கு சின்ன குழல் போல இருக்கும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்துவைத்த சீப்பு சீடைகளைப் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்

தால் வெஜ் கத்லி

*தீபாவளி ஸ்பெஷல்..!!*

 *தால் வெஜ் கத்லி*

*தேவையானவை:*

 கடலைப் பருப்பு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், பால் பவுடர் - கால் கப், காய்கறி கூழ் - அரை கப் (பீட்ரூட், கேரட், பீன்ஸ், சௌசௌ, மஞ்சள் பூசணி அனைத்தையும் ஆவியில் வேகவைத்து மிக்ஸியில் அரைக்க வும்), வெனிலா எசன்ஸ் - சில துளிகள், நெய் - 4 டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை - விருப்பமான அளவு

*செய்முறை:*

 கடலைப்பருப்பை கிள்ளு பதமாக வேகவைத்து நீரை வடித்து ஆறவிட்டு, மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அடிகனமான வாணலியில் ஒரு கப் தண்ணீர், சர்க்கரை, காய்கறி கூழ் சேர்த்து ஒற்றை கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு, கடலைப்பருப்பு பவுடர் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகி வரும்போது, அவ்வப் போது நெய்யை சேர்த்துக் கிளற வும். பிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

*குறிப்பு:*

 கலவையை இரண்டு வெவ்வேறு நிற காய்கறி கொண்டு தனித்தனியாகக் கிளறி, ஒன்றன் மேல் ஒன்றாக பரப்பி ஆறியவுடன் வில்லைகள் போட்டும் பரிமாறலாம்

ஓமப்பொடி

*தீபாவளி special*_ 🎍
ஓமப்பொடி

 *தேவையானவை:* 

கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, பச்சரிசி மாவு - 100 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.

🍴 *செய்முறை:* 

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

 *குறிப்பு:* 

விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள் / மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.

டபுள் கலர் மைதா கேக்

_*தீபாவளி special*_ 🎍

டபுள் கலர் மைதா கேக்

*தேவையானவை:* 

மைதா - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் அல்லது வனஸ்பதி - 100 கிராம், பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - சில துளிகள், பால் பவுடர் - 50 கிராம்,

🍴 *செய்முறை:* 

நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும்.

 சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.

மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர் சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். 

இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.

கேஷ்யூ ஃப்ரை

_*தீபாவளி special*

கேஷ்யூ ஃப்ரை

*தேவையானவை:* 

பாதியாக இருக்கும் முந்திரி - 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) - அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி - பச்சை மிளகாய் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ.

🍴 *செய்முறை:* 

ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.

பாதுஷா

_*தீபாவளி special

பாதுஷா

 *தேவையானவை:* 

மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு, ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.

🍴 *செய்முறை:* 

உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்.

 பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து, கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

பாதாம் மில்க் அல்வவா

தீபாவளி special
பாதாம் மில்க் அல்வவா
 
 *தேவையானவை:* 

பாதாம் பருப்பு - 100 கிராம், பால் - 100 மில்லி, சர்க்கரை - 150 கிராம், பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, நெய் - 50 கிராம்.

🍴 *செய்முறை:* 

பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும்.

 அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்

 *குறிப்பு:* 

அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

தேங்காய் பர்ஃபி

தேங்காய் பர்ஃபி

 *தேவையான பொருள்கள்*        

 தேங்காய் - ஒரு கப், சர்க்கரை - 1 1/2 கப், நெய் - 3/4 கப், ஏலக்காய்- 6, முந்திரி பருப்பு- 15        

  *செய்முறை*           

 தேங்காயை நல்ல வெள்ளையாகத் துருவிக் கொள்ளவும். 4 தேக்கரண்டி நெய்யில் முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.வாணலியில் 1 1/2 கப் சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து பாகாக்கவும்.கையால் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம் வந்ததும், துருவிய தேங்காயை அதில் சேர்த்து கிளறவும். வறுத்த முந்திரி பருப்பு, பொடித்த ஏலப்பொடியை சேர்க்கவும்.தேங்காயும், பாகும் சேர்ந்து கெட்டியானதும் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் பர்ஃபி பதம் வந்ததும் தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.கண்ணைக் கவரும் வெண்ணிற தேங்காய் பர்ஃபி நீங்கள் சாப்பிடவும், பரிமாறவும் ரெடி.

ரசகுல்லா

ரசகுல்லா

 *தேவையானவை* 

🧂பால் – ½ லீற்றர்

🧂 எலுமிச்சை சாறு – 11/2 மேசைக்கரண்டி

🧂 தண்ணீர் – 1 ¾ கப்

🧂 சீனி – ¾ கப்

🧂 பாதாம் – தேவையானளவு

🧂 பிஸ்தா – தேவையானளவு

 *செய்முறை* 

🥘பாலை கொதிக்க வைக்கவும்.கொதித்ததும் அதில் எலுமிச்சம் சாறு சேர்த்து பால் திரையும் வரை தொடர்ந்து கிளறவும். 

🥘 பாலில் இருந்து தண்ணீ பிரிந்ததும் அதனை மெல்லிய துணியில் போட்டு தண்ணீர் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விடவும். 

🥘 தண்ணீர் வடிந்ததும் திரைந்த பாலை தனியாக எடுத்து அதனை மென்மையாக பிசைந்து சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும். 

🥘 பின்னர் அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சீனி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

🥘 சீனி தண்ணீர் கரைந்து சிறிய கெட்டியான பின்னர் உருட்டி வைத்த உருண்டைகளை அதில் போடவும். 

🥘 முதலில் குறைவான வெப்பத்தில் 5 நிமிடங்கள் வேக விடவும்.பின்னர் மிதமான வெப்பத்தில் 10 நிமிடங்கள் வேக விடவும். 

🥘 10 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் விடும் போது 3 நிமிடத்திற்கு ஒரு முறை மூடியை திறந்து விடவும். 

🥘 உருண்டைகள் வெந்ததும் அதனை குளிர வைத்து அத்ன் மேல் பாதாம் பிஸ்தாவை தூவி பரிமாறலாம்.

கோதுமை அல்வா

கோதுமை அல்வா

 *தேவையான பொருட்கள்* :

பொருள்அளவு
கோதுமை மாவு கால் கிலோ
சர்க்கரை 300 கிராம்
கேசரிப் பவுடர் கால் டீஸ்பூன்
நெய் தேவைக்கேற்ப
ஏலக்காய் 3 (பொடியாக்கியது)
 *செய்முறை :* 

  வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டி இல்லாதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

  பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

  அதன் பிறகு மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

  சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி, கேசரிப் பவுடர் தூவி கிளறி, இறக்கி விட வேண்டும். கோதுமை அல்வா ரெடி!!!

பிரெட் அல்வா

பிரெட் அல்வா

 *தேவையான பொருட்கள்* :

பொருள் - அளவு
பிரெட்6
கோதுமை மாவு1 கப்
சர்க்கரை2 கப்
நெய்தேவைக்கேற்ப
முந்திரி6
திராட்சை6
ஏலக்காய் தூள்1 டீஸ்பு ன்
கலர் பவுடர்கால் டீஸ்பு ன்
 *செய்முறை :* 

  முதலில் பிரெட்டை துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை நன்றாக சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.

  அதே வாணலியில் பிறகு முந்திரி, திராட்சையை நெய் விட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

  பிறகு ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு கோதுமை மாவை வறுக்கவும். பின்னர் வறுத்த பிரெட் துண்டுகள், சர்க்கரை சேர்த்து பிரட்டி கொள்ளவும்.

  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கலர் பவுடர் சேர்த்து, பிறகு பிரெட் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும்.

  பின்னர் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறவும். இப்போது சுவையான பிரெட் அல்வா தயார்.

மைதா இனிப்பு சமோசா

மைதா இனிப்பு சமோசா

 *தேவையான பொருட்கள்* :

பொருள்அளவு
மைதா மாவு கால் கிலோ
தேங்காய் துருவல் கால் கப்
வெல்லம் கால் கிலோ
எண்ணெய் தேவைக்கேற்ப
ஏலக்காய் 2 (பொடியாக்கியது)
 *செய்முறை :* 

  மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். 

  வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு கொதித்ததும் அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாகக் கிளறி கொள்ளவும்.

  பின்பு தண்ணீர் வற்றியதும் வாணலியை இறக்கி வைத்து ஏலாக்காயை பொடி போட்டு கலக்கிய தேங்காய் பூரணத்தை இறக்கி வைக்கவும்.

  அதன் பிறகு தேங்காய் பூரணம் ஆறியதும் அதை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். 

  பிசைந்து வைத்துள்ள மைதா மாவை பூரிக் கட்டையில் தேய்த்து முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும். அதனுடன் செய்து வைத்துள்ள தேங்காய் பூரணத்தை நடுவில் வைத்து நன்றாக மூடி சமோசா வடிவம் போல் செய்யவும்.

  பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை போட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்த உடன் கரண்டியால் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மைதா இனிப்பு சமோசா ரெடி...

பாதுஷா

பாதுஷா

 *தேவையான பொருட்கள்* :

பொருள்அளவு
மைதா மாவு கால் கிலோ
சமையல் சோடா அரை டீஸ்பூன்
வனஸ்பதி 100 கிராம்
சர்க்கரை கால் கிலோ
எண்ணெய் தேவைக்கேற்ப
 *செய்முறை :* 

  ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், சமையல் சோடா, வனஸ்பதி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

  அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

  மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.

  பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டையாக உருட்டி, அதனை வடைப் போல் தட்டவும்.

  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் பாதுஷாவை போட்டு மிதமான தீயில் வைத்து லேசாக சிவந்து வரும் வரை வேக விடவும். பாதுஷா லேசாக சிவந்து வெந்ததும் பாகில் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து அதன் பிறகு எடுக்கவும். சுவையான பாதுஷா தயார்.

மைதா கேக்

மைதா கேக்

 *தேவையான* *பொருட்கள் :* 

பொருள்அளவு
மைதா 1 கிலோ
ரவை கால் கப்
அரைத்த சர்க்கரை பவுடர் முக்கால் கிலோ
சோடா உப்பு கால் டீஸ்பூன்
டால்டா 2 டீஸ்பூன்
தண்ணீர் தேவைக்கேற்ப
ஏலக்காய்3(பொடியாக்கியது)
பாதாம் எசன்ஸ் கால் டீஸ்பூன்
பால் பவுடர் ஒன்றரை டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
 *செய்முறை :* 

  மைதாவையும், ரவையையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.

  அதனுடன் டால்டா, சோடா உப்பு, அரைத்த சர்க்கரை பவுடர், தண்ணீர், ஏலக்காய் தூள், பாதாம் எசன்ஸ், பால்பவுடர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  அதனை 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

  உருண்டைகளை சப்பாத்தி கல்லில் சிறு மைதாமாவை தடவி சப்பாத்தி போல் கொஞ்சம் தடிமனாக தேய்க்கவும்.

  தேய்த்த சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக கத்தி மூலம் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை தனியே எடுத்து சிறிது நேரம் காயவைத்துக் கொள்ளவும்.

  பின்பு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் துண்டுகளை போட்டு பொன்நிறமாக வந்தவுடன் எடுத்து வாய்அகன்ற பாத்திரத்தில் போடவும்.

  பொரித்த துண்டுகள் ஆறியதும் காற்றுபுகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும். சுவையான மைதா கேக் தயார்.

மில்க் டாஃபி

*தீபாவளி special*


 _*மில்க் டாஃபி*_

🍱 *தேவையானவை:* 

கன்டென்ஸ்டு மில்க் (கடைகளில் கிடைக்கும்) - 1 டின், சர்க்கரை - 1 கப், வெண்ணெய் - 50 கிராம், (விருப்பப்பட்டால்) லிக்விட் க்ளூகோஸ் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - 1 கப், பாதாம் + முந்திரி + அக்ரூட் - 50 கிராம்.

🍴 *செய்முறை:* 

கன்டென்ஸ்டு மில்க், தண்ணீர், சர்க்கரை சேர்த்து (விருப்பப்பட்டவர்கள் லிக்விட் க்ளூகோஸையும் கலந்து) அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். இது நன்குசேர்ந்து வரும்பொழுது, சிறிதளவு எடுத்து உருட்டிப் பார்த்தால் உருட்ட வரும். இந்தப் பதத்தில் வெண்ணையையும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, அக்ரூட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி, சிறிது ஆறவிடுங்கள். பின்னர், சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால், சுவை மிகு ‘மில்க் டாஃபி’ ரெடி (சூடான கலவையை ஒரு ட்ரேயில் பரப்பி, துண்டுகள் போட்டும் பரிமாறலாம்).

புதன், 12 அக்டோபர், 2022

Friendship Quotes

Quotes About Friendship In Tamil


Quotes about friendship in Tamil that will help to understand the value of friendship. This post includes friendship Tamil quotes in the Tamil language.

Quotes About Friendship In Tamil
உண்மையான நட்பின்
மதிப்பு அதனை இழக்கும்
வரை பலரும் உணர்வதில்லை.
அதை இழந்த பிறகு தான்
அதன் மதிப்பை
பலரும் உணர்வார்கள்.

நம்மை பற்றி நமக்கே
தெரியாத விடயங்களை
கூட தெரிந்து வைத்திருக்கும்
அன்பு தான் இந்த நட்பு.

நண்பர்களை பற்றி
பெருமையை மற்றவர்களிடம்
பேசுங்கள் நண்பர்களின்
குறையை ஒரு போதும்
மற்றவர்களிடம் பேசாதீர்கள்.

நாம் கண் கலங்கும் போது
வரும் கண்ணீரை
துடைப்பது நட்பு அல்ல…
நமக்கு மறுமுறை கண்கள்
கலங்காமல் தடுப்பது
தான் நட்பு…!

நாம் உயரத்தில் இருக்கும்
போது வருபவர்கள்
எல்லாம் நண்பர்கள்
கிடையாது.. நம்
வறுமையின் போதும்
உடன் இருப்பவர்கள்
நட்பின் இலக்கணம்.

உண்மையான நட்பு
எந்த சூழ்நிலையிலும்
மற்றவர்கள் முன்
உன்னை விட்டுக்
கொடுக்காது.


அர்த்தமற்ற வாழ்க்கையை
அர்த்தமாக மாற்றும் சக்தி
அன்புக்கு உண்டு.. அந்த
வாழ்க்கையை அற்புதமாக
மாற்றும் சக்தி
நட்புக்கு உண்டு.

நீ துரோகிகளை
சந்திக்கும் போது தான்
சிறந்த நட்பின்
அருமையை
நீ உணர்வாய்.

மனதில் ஏற்படும்
காயங்களுக்கு நண்பன்
மருந்தாக இருப்பான்.
ஆனால் நண்பன்
ஏற்படுத்தும் காயத்திற்கு
மருந்து இல்லை.

நட்பையும்
மகிழ்ச்சியையும்
இரட்டிப்பாக்க அதை
திருப்பி நட்பிடமே
கொடுத்து விடுங்கள்.

சந்தோஷமான நேரங்களில்
சேர்ந்து சிரிப்பது மட்டும்
நட்பு அல்ல.. துக்கமான
நேரங்களிலும் சேர்ந்து
கண்ணீர் விடுவது
தான் நட்பு.


நட்பை விலை கொடுத்து
வாங்க முடியாது அது
தகுதி உடையவர்களுக்கு
சரியான நேரத்தில்
கிடைத்து விடும்.

நம் வாழ்க்கையை
இலகுவாக வாழ நாம்
செய்யும் தவறுகளை
திருத்தவும் நம்மை சரி
செய்யவும் நட்பு வேண்டும்.

சிறந்த நண்பன்
உனக்குள் இருக்கும்
சிறந்தவற்றை உலகிற்கு
கொண்டு வர
உறு துணையாக
இருப்பான்.

நட்பு கவிதை வரிகள் தமிழ்

நட்பு கவிதை வரிகள் தமிழ்

Tamil Kavithaigal Natpu – நட்பு கவிதை வரிகள் தமிழ் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். நட்பு கவிதைகள் பலராலும் விரும்பப்படும் கவிதை.

காரணம் நட்பை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு உண்மையான நட்பு ஆயிரம் உறவுகளுக்கு மேலானது.

Tamil Kavithaigal Natpu – நட்பு கவிதை வரிகள் தமிழ்
சொந்தங்கள் என்பது
பனி துளி போன்றது
சிறு பொழுதில் மறைந்து
விடும். நட்பு என்பது
பரந்த வானம் போன்றது
உன்னை சுற்றி எப்போதும்
நிலைத்து நிக்கும்.

வலிகள் கூட
நொடிப்பொழுதில்
மறைந்து விடும்.
உன்னை சுற்றி நல்ல
நண்பர்கள் இருப்பார்கள்
என்றால்.

ஆயிரம் விண்மீன்கள்
ஆகாயத்தில் பிரகாசித்தாலும்
இரவுக்கு அழகு நிலவும் தான்.
அதே போலத்தான் ஆயிரம்
உறவுகள் மண்ணில்
இருந்தாலும் வாழ்க்கைக்கு
அழகு உண்மையான
நட்பு தான்.

நட்பு மற்ற உறவுகளை
விட மிகவும்
வித்தியாசமானது
இறக்கும் வரை பிரிக்க
முடியாதது தான் நட்பு.

நட்பின் துரோகம் மிகக்
கொடூரமானது எக்காரணம்
கொண்டும் அதை செய்து
விடாதீர்கள் அதற்கு
வாழ்நாளில் பாவ
மன்னிப்பே கிடைக்காது.


நீ சண்டை போட்டு பிரிந்த
பிறகும் உன்னை பற்றிய
ரகசியங்களை வெளியே
சொல்லாவிட்டால் நீ
பிரிந்திருப்பது மிகச்
சிறந்த நட்பை அந்த
நட்பை எந்த காரணம்
கொண்டும் உதாசீனம்
செய்யாதே.

நண்பர்கள் என்ற
செல்வம் உன்னை
தேடி வர புன்னகை
என்ற ஒரு கருவி மட்டும்
உன்னிடம் இருந்தால்
போதும்.

நீ நண்பர்களிடம்
மரியாதையை
எதிர்பார்த்தால்
அவர்களிடம் நெருங்கி
பழக்க முடியாது.
நண்பர்களிடம் நெருங்கி
பழகும் போது
மரியாதையை
எதிர்பார்க்க கூடாது.

நீ செய்த தவறை
சரி என நியாயப்படுத்தும்
நட்பை விட நீ செய்தது
தவறு தான் என்று
சுட்டிக்காட்டும் நட்பே
சிறந்த நட்பு.

நட்பிடம் போடும் ஆயிரம்
சண்டைகள் வலியை
ஏற்படுத்தாது. ஆனால்
ஒரு நல்ல நட்பின் மவுனம்
இதயத்தையே
உடைத்து விடும்.


அழகான நட்பு கவிதைகள்

அழகான நட்பு கவிதைகள்

Natpu Kavithaigal Tamil – அழகான நட்பு கவிதைகள் தொகுப்பை இந்த பதிவில் நீங்கள் காணலாம். பலரும் விரும்பும் ஒரு உறவு தான் நட்பு.

நல்ல நண்பர்கள் கிடைத்தவர்கள் எல்லாம் வாழ்வின் அதிஷ்டசாலிகள் என்று சொல்லுவார்கள். நல்ல நண்பர்கள் நம் குடும்பத்தில் ஒருவர்.

Natpu Kavithaigal Tamil – அழகான நட்பு கவிதைகள்
ஒவ்வொருவருக்கும்
கடவுள் துணை இருக்கின்றார்.
அந்த கடவுளின்
வடிவம் தான் நட்பு.

உன் நண்பன் உன்னுடன்
இருந்தால் இந்த உலகம்
உன் காலின் கீழ் இருக்கும்.

நல்ல நட்பிடம் எவ்வளவு
வேண்டுமானாலும்
கோபத்தை காட்டி
சண்டை போடலாம்.
ஆனால் ஒரு நிமிடம்
கூட சந்தேகம் எனும்
கொடிய விஷத்தை
உள்ளே விட கூடாது.

நீ தடுமாறி கீழே விழும்
போது தாங்கி பிடிப்பவனும்
தடம் மாறும் போது தட்டிக்
கேட்பவனும் தான்
உண்மையான நட்பு..

எந்த உறவை மறந்தாலும்
நல்ல நட்பை யாரும்
வாழ்நாளில் மறப்பதில்லை.


நட்பு என்பது வெறும்
வார்த்தை அல்ல அது
நம் உணர்வோடும்
உயிரோடும் கலக்கும்
அழிக்க முடியாத
பொக்கிஷம் அது.

வாழக்கையை புரட்டி
பார் நீ நண்பர்களுடன்
இருந்த தருணம் தான்
நீ உன் வாழ்க்கையில்
சந்தோசமாக இருந்த
தருணமாக இருக்கும்.

நட்பில் உண்மையான
நம்பிக்கைக்கு உரிய
நண்பனாக இரு அல்லது
எதிரியாக கூட இருந்து விடு
ஆனால் ஒரு போதும்
துரோகியாக மட்டும்
இருந்து விடாதே.

நண்பன் வெற்றி பெற்றால்
அவன் என் நண்பன் என்று
பெருமை கொள். நண்பன்
தோல்வி அடைந்தால் நான்
உன் நண்பன் என்று அவன்
அருகில் நிற்க மறந்து விடாதே.

நம் வாழ்வு திசை மாறும்
என தெரிந்தும் சில நட்புடன்
பயணிக்க மனம் விரும்பும்.


நட்பை தேவைக்காக
நேசிப்பதை விடுத்து
உண்மையாக நேசித்து
பார் நீ உயிர் வாழும் வரை
அந்த நட்பு உன்னை விடாது.

நட்பு என்றால் உன் மனதில்
வைக்க வேண்டிய வரிகள்
பழகும் போது உண்மையாய்
இருக்க வேண்டும். பழகிய
பின்பு உயிராய்
இருக்க வேண்டும்.