ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்?



_*தைப்பூச ஸ்பெஷல்....*_


*(05-02-2023)* 

*முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்?* 

முருகன், அழகன், குமரன், வேலன், ஆறுமுகன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் ஆறுபடை வீடுகொண்ட முருகனுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வழிபடுகிறார்கள். ஏன் காவடி எடுக்கிறார்கள் தெரியுமா?

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விருமலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விருகிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை திருவாவினன்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியை தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியை தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்" என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர், இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனை தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

அதன் காரணமாக பக்தகோடிகள் தற்போது முருகனுக்கு காவடி எடுத்து வந்து வழிபட்டு குமரனை தரிசித்து செல்கின்றனர்.

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறையில்லை! வேலவனை வேண்டி வாழ்வில் வெற்றி பெறுவோமாக!


Previous Post
Next Post

0 Comments: