திங்கள், 16 அக்டோபர், 2023

அமாவாசைவிஷேச தலங்கள்..

அமாவாசைவிஷேச தலங்கள்..

அமாவாசை  ஒட்டி முன்னோர் வழிபாட்டுக்குரிய தலங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. 

*ராமேஸ்வரம்* 

ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு ராம பிரதிஷ்டை செய்த சிவன் ராமலிங்கம் என்றும், அனுமன் பிரதிஷ்டை செய்த சிவன் விசுவலிங்கம் என்றும் அறியப்படுகிறது. 
காசி யாத்திரை செல்வோர் இங்கு வந்து தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்தால் மட்டுமே யாத்திரை சென்ற பலன் உண்டாகும். கோயிலுக்கு எதிரிலுள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. 

பிதுர் தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று தீர்த்தங்களில் நீராடி, ராமநாதசுவாமியை வழிபடுவது நல்லது.
எல்லா அமாவாசை தினத்தில் வழிபாடு செய்வது நல்லது மதுரையில் இருந்து 200 கி.மீ.,
தொலைபேசி: 04573 - 221 223

*திருப்புவனம்* 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம், புஷ்பவன காசி என்ற சிறப்பு பெயர்கள் உண்டு.

இங்கு வைகை ஆறு, வடக்கு நோக்கி உத்திரவாகினியாக ஓடுகிறது. இங்கு தர்ப்பணம் செய்து, இறந்தோரின் அஸ்திகளை ஆற்றில் கரைத்தால் அவர்கள் நற்கதியை பெறுவர் என்பது ஐதீகம். நாயன்மார்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றதால், சற்று சாய்ந்த நிலையில் இருப்பதைக் காணலாம்.
மதுரையில் இருந்து 18 கி.மீ., 
தொலைபேசி: 04575- 265 082, 84.

*கன்னியாகுமரி* 

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். 

பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள் அம்பிகையின் உதவியை நாடினர். கன்னியால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க,
அம்பிகையே குமரியாக வடிவெடுத்து தவத்தில் ஈடுபட்டாள். பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி, பாணாசுரனை வதம் செய்தாள். 
இத்தலத்தில் ஆடி அமாவாசை நாளில் நீராடி பிதுர்தர்ப்பணம் செய்வோருக்கு முன்னோர் ஆசி உண்டாகும் என்பது ஐதீகம். 
தொலைபேசி: 04652 - 246 223

*அழகர்கோவில்* 

திவ்யதேசங்களில் ஒன்றான அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். மலைத்தலமான இங்கு சோலைமலை முருகனும் கோயில் கொண்டிருக்கிறார். காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பசாமி சக்தி மிக்கவர். உருவமற்ற இவர் கோயில் கோபுர வாசலில் குடிகொண்டிருக்கிறார். இவர் முன் சத்தியம் செய்து வழக்கு தீர்ப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இங்கு அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கரதீர்த்தம், நுாபுரகங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

இதில் ஆடிஅமாவாசை நாளில் நுாபுர கங்கையில் நீராடி வழிபடுவது சிறப்பு. சுவை மிக்க இதில் நீராடினால் தோல்நோய் அகலும் என்பது ஐதீகம். 
மதுரையில் இருந்து 25 கி.மீ.,
தொலைபேசி: 0452 - 247 0228, 247 0229

*அய்யாவாடி* 

அமாவாசை வழிபாட்டு தலமான ஐயாவாடியில், காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். போரில் வெற்றி பெறுவதற்காக ராமர், யாகம் செய்து தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் கரிய நிறத்துடன் சிங்க முகம், 18 கைகளுடன், சிரித்த முகத்துடன் இங்கு காட்சி தருகிறாள். 

அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பல யாகம் என்னும் மிளகாய் வத்தல் யாகம் நடக்கும். அமாவாசையன்று இங்கு வருவோருக்கு எதிரி தொல்லை நீங்கும் என்பது ஐதீகம். 
கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் இருந்து 3 கி.மீ., 
தொலைபேசி: 0435 - 246 3414

*சொரிமுத்தையனார்* *கோயில்* 

பொதிகை மலையில் சாஸ்தாவின் முதல் தலமான சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. சாஸ்தாவான இவர் இடது காலை மட்டும் குத்துக் காலிட்டு வலக்காலை தொங்கவிட்டபடி பூரணை, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார். 

தாமிரபரணியில் உள்ள புனித தீர்த்தங்களில் முதலாவதான பாணதீர்த்தம் இக்கோயிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. வானத்தில் இருந்து விழுவதைப் போல தோற்றம் கொண்ட இதனை 'வான தீர்த்தம்' என்றும் சொல்வர். 
அம்பில் புறப்பட்ட பாணம் போல அருவி நீர் கொட்டுவதால் பாணதீர்த்தம் என வந்ததாக கூறுவர். ஆடி அமாவாசையன்று பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகின்றனர். 
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் 50 கி.மீ., அங்கிருந்து காரையார் செல்ல பஸ் வசதி உள்ளது. 
தொலைபேசி: 04634 250 209

*சுருளிமலை* 

மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் சுருளிமலையில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிறார்.
சித்தர்கள் முருகனை வழிபட்ட தலமான இங்கு, ஆண்டிக்கோலத்தில் சுவாமி காட்சியளிப்பதால் சுருளியாண்டி என அழைக்கப்படுகிறார். கைலாச புடவு என்னும் குகையில் கைலாசநாதராக சிவனும், குகையின் மேல்பகுதியில் முருகனும் இருக்கின்றனர். சனியின் பிடியிலிருந்து தேவர்களை காப்பாற்றியதால், இங்கு வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பர்.

ஆடி அமாவாசைஅன்று சுருளி தீர்த்தம் அருவியில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்கின்றனர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோயிலில் விபூதியே பிரசாதமாக வழங்கப்படுகிறது. 
தேனியிலிருந்து 40 கி.மீ.,
அலைபேசி: 93452 61022.

*ஆனைமலை* 

ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் ஒன்று இருந்தது. அதில் பழங்களை யாரும் பறிப்பது கூடாது என உத்தரவிட்டிருந்தான். 
ஒருநாள் ஆழியாற்றில் நீராடிய இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்த மாம்பழத்தை எடுத்து உண்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை விதித்தான். ஊரார் அவளுக்கு மயானத்தில் சயன கோலத்தில் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினர்.
உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி காட்சி தருகிறாள். நீதி தெய்வமான இவளை அமாவாசை நாளில் வழிபடுவது சிறப்பு. 
பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,
தொலைபேசி: 04253 - 282 337, 283 173 

*அனுமந்தபுரம்* 

தட்ச யாகத்தை நிறுத்த சிவன் வீரபத்திரரை அனுப்பினார். தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்ட, தலை யாகத்தீயில் விழுந்தது. தட்சனின் தந்தையாகிய பிரம்மாவின் ஆணையால், அங்கிருந்த ஆட்டின் தலை தட்சனுக்குப் பொருத்தப்பட்டது. அங்கிருந்து சினத்துடன் புறப்பட்ட வீரபத்திரர் சிவனிடம் முறையிட்டார். பூலோகத்தில் அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கினால் சாந்தம் உண்டாகும் என வழிகாட்டினார். 

அதன்படி வீரபத்திரருக்கு கோயில் உருவானது. அமாவாசையன்று இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். 
விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 10 கி.மீ., 
தொலைபேசி: 044 - 2746 4325

*பண்ணாரி* 

வனப்பகுதியில் மேய்ந்த பட்டியில்(பசுக்கூட்டத்தில்) ஒரு பசு மட்டும் வேங்கை மரத்தடியில், தானாக பால் சுரந்தபடி நின்றிருந்தது. 

இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், சுயம்பு திருமேனி இருப்பதை கண்டான். விஷயமறிந்த ஊரார் வந்தபோது, அங்கிருந்த ஒருவருக்கு அருள் வந்து “இங்கு பண்ணாரி மாரியாக வீற்றிருந்து அருள் புரிவேன்” என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோயில் அமைத்து வழிபாடு செய்தனர். 

தெற்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த அம்மனின் பிரசாதமாக புற்று மண்ணே தரப்படுகிறது. ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 
சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி.மீ., ஈரோட்டில் இருந்து 77 கி.மீ.,
தொலைபேசி: 04295 - 243366

*அச்சிறுபாக்கம்* 

திரிபுர அசுரர்களை அடக்க எண்ணிய சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்ற நியதியை பின்பற்றவில்லை. இதை அறிந்த விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனைத் தடுத்தார். உண்மை உணர்ந்த சிவனும் உளப்பூர்வமாக விநாயகரை மனதில் தியானிக்க தேர் சரியானது.

தேரின் அச்சு முறிந்த இடமான அச்சிறுபாக்கத்தில் சிவனுக்கு கோயில் அமைக்கப்பட்டது. ஆட்சிபுரீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் விளங்கும் இவரை அமாவாசை நாளில் வழிபட்டால் முயற்சி தடையின்றி நிறைவேறும். 
காஞ்சிபுரத்திலிருந்து 70 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. 
தொலைபேசி: 044 - 2752 3019

*திருச்செங்கோடு* 

கொடிமாடச் செங்குன்றம் என்று சிறப்பு பெயர் கொண்ட தலம் திருச்செங்கோடு. இங்கு சிவன் அர்த்தநாரீஸ்வரராக அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார்.

இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னதியும் சிறப்பு மிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோயிலான இங்குள்ள 60வது படி, சத்தியப்படி என அழைக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் வம்பு, வழக்குகள் இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. 

அமாவாசை நாளில் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு தீர்த்தம் பருகினால் உடல், உள்ளநோய் நீங்கும். கருத்துவேறுபாடு நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். 
ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 04288 - 255925

Previous Post
Next Post

0 Comments: