புதன், 8 நவம்பர், 2023

அருள்மிகு மங்களநாதர் திருக்கோவில்

அருள்மிகு மங்களநாதர் திருக்கோவில்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : உத்தரகோசமங்கை
முகவரி : உத்தரகோசமங்கை, ராமநாதபுரம். ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : உத்தரகோசமங்கை

வரலாறு : ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் ஒன்று உள்ளது என்றால் அது அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோவில் மட்டுமே.

தல வரலாறு :

மண்டோதரி (இராவணனின் மனைவி) என்ற பெண் முன்னொரு காலத்தில் உலகில் தலைசிறந்த சிவனின் பக்தரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஈசனை தியானித்தாள். சிவபெருமான் முனிவர்களை அழைத்து தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை கொடுத்து விட்டு தான் மண்டோதரிக்கு காட்சி தர செல்வதாகவும், தான் வரும் வரை இதை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கூறி விட்டு சென்றார். சிவபெருமான் மண்டோதரி முன்பு காட்சி அளித்து வரத்தினை அருளினார். பின் இராவணன் இருக்கும் இடத்திற்கு சென்று அந்த இடத்தில் ஒரு குழந்தைபோல் அவதாரம் எடுத்தார். ஆனால் இராவணனும் ஒரு சிவபக்தன் அதனால் தன் எதிரில் தவழ்ந்து வரும் குழந்தை ஈசன் என்பதை உணர்ந்து குழந்தையை தூக்கினான். ஈசன் இராவணனை சோதிக்க நினைத்து தன்னையும் தன்னை சுமப்பவனையும் சேர்த்து எரிக்க ஆரம்பித்தார். அந்த தீ மூவுலகையும் தகிக்க வைத்தது. அந்த வேளையில் சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கு ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது அன்று முதல் 'அக்னி தீர்த்தம்' என பெயர் பெற்றது. சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கு ஆபத்து வந்த போது அதை பாதுகாப்பதற்காக மாணிக்கவாசகர் ஒருவர் மட்டும் தைரியமாக இருந்து அந்த நூலை சிவபெருமான் வரும் வரை காப்பாற்றினார். பிறகு இராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார். வேத ஆகம நூலை காப்பாற்றியதற்காக சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்கவடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

தலச்சிறப்பு :

ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாளம்பூ சார்த்தலாம் என்பது இந்த தலத்தின் முக்கியமான சிறப்பம்சமாகும். பிரம்மா, இத்தலத்தில் சாப விமோச்சனம் பெற்றார். இங்கு இருக்கும் இலந்தை மரத்தடியில் சுயம்புவாக இறைவன் தோன்றினார். அந்த மரம் இன்னும் இங்கு உள்ளது. இங்கு இருக்கும் நடராஜர் சிலை மரகதத்தால் ஆனது. இந்த நடராஜருக்கு வருடம் முழுவதும் சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும். ஆருத்ரா தரிசனத்தன்று ஒரு நாள் மட்டும் மக்கள் தரிசனத்திற்காக சந்தனக்காப்பு கலைக்கப்படும். அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்காக கூடுவர். ஈசன் வேதத்தின் இரகசியங்களை உமையம்மைக்கு அருளிய புண்ணிய திருத்தலம். இக்கோவில் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியதால் உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பெயரும் உண்டு.

பிரார்த்தனை :

அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். காலையில் சுவாமியையும், அம்பாளையும் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும். மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன், தொழில் மேன்மையும், பொருள் பெருக்கமும் ஏற்படும்.
Previous Post
Next Post

0 Comments: