புதன், 22 நவம்பர், 2023

அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : காட்டுமன்னார்கோயில்
முகவரி : காட்டுமன்னார்கோயில், கடலூர்.
தாலுகா : காட்டுமன்னார்கோயில்

வரலாறு : காத்தாயி அம்மன் என்பவர் நாட்டுப்புறத் தெய்வம் ஆவார். இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக அமைக்கப்படுகிறார். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தகைய சிறப்புகளை பெற்ற காத்தாயி அம்மன் திருக்கோவில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

தல வரலாறு : 

சோழர்கள் தங்கள் குலதெய்வமாக அம்பிகையை பல்வேறு பெயர்களில் வழிபாடு செய்து வந்தனர். இவர்களில், முதலாம் விக்கிரமசோழன் காத்தாயி அம்மனை வழிபட்டு வந்தான். ஒருமுறை இவன், மதுரையை ஆண்ட வமிசசேகர பாண்டியன் மீது படையெடுத்தான். 

பாண்டியனுக்கோ போர் செய்வதிலும், உயிர்கள் அழிவதிலும் உடன்பாடில்லை. சிவ பக்தனான அவன், சோழனிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி சொக்கநாதரிடம் வேண்டினான். மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவன், குறவன் வேடத்தில் சென்று சோழனுடன் போரிட்டார். அவரை எதிர்க்க முடியாத மன்னன், குறவனாக வந்திருப்பது சிவன் என அறிந்து, அவரது பாதத்தில் சரணடைந்தான். 

சிவன் அவனுக்கு காட்சி தந்து, 'மண்ணாசை கொண்டு செய்யப்படும் போரினால், உயிர் இழப்பு தான் ஏற்படும். அதை விடுத்து வேறொரு நன்மையும் உண்டாகாது' என உபதேசம் செய்து, 'மறுபிறப்பிலும் மன்னனாகப் பிறந்து நல்லாட்சி புரிவாய்' என ஆசிர்வதித்து மறைந்தார். இம்மன்னனே மறுபிறப்பில் இரண்டாம் விக்கிரமசோழனாக பிறந்தான். முற்பிறப்பில் தான் வழிபட்ட காத்தாயி அம்பாளை தொடர்ந்து வழிபட்டான். 

மன்னனின் பங்காளிகள், இவனது ஆட்சிக்கு தொந்தரவு செய்தனர். அவர்களை ஏதும் செய்ய விரும்பாத மன்னன், அம்பிகையிடம், 'தாயே! நான் முற்பிறப்பில் பாண்டியனுடன் போர் செய்ய சென்றபோது, சிவனே குறவனாக வந்து போரை தடுத்து என்னை ஆட்கொண்டார். இப்போது பங்காளிகளே எனக்கு தொந்தரவு தருகின்றனர். இதிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்' என வேண்டினான். 

மன்னனின் வேண்டுதலை ஏற்ற அம்பாள், குறத்தி வேடத்தில் வந்து, பங்காளிகளிடம் பேசி, பிரச்சனையை தீர்த்து வைத்தாள். மகிழ்ந்த மன்னன், குறத்தி வடிவில் ஒரு அம்பிகையை வடித்து, காத்தாயி அம்பாள் அருகில் பிரதிஷ்டை செய்தான்.

தல பெருமை : 

மூலஸ்தானத்தில் காத்தாயி அம்பாள், இடுப்பில் முருகனைத் தூக்கி வைத்தபடி இருக்கிறாள். இவளை, 'குழந்தையம்மன்' என்றும் அழைக்கிறார்கள். இவளுக்கு வலப்புறம் பச்சை வாழியம்மனையும், அடுத்து குறத்தி வடிவில் பூங்குறத்தியம்மனையும் ஆகிய மூன்று அம்பிகையை தரிசிக்கலாம். 

கைலாய சிவன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. இங்கு சிவன் உருவ வடிவில் காட்சி தருகிறார். இவர், தட்சிணாமூர்த்திக்குரிய தென்திசை நோக்கி இருப்பதால், கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகிறார்கள். 

பிரகாரத்தில் முத்துமுனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி ஆகிய காவல் தெய்வங்களாக அருள்பாளிக்கின்றனர்.

பிரார்த்தனை : 

சகோதர உறவு மேம்பட, மூன்று அம்பிகையருக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். 

சுகப்பிரசவம் ஆவதற்கும், பிரசவத்திற்கு பின் தாயும் சேயும் நலமாக இருப்பதற்கும் காத்தாயி அம்பாளை வழிபடுகிறார்கள்.

இருப்பிடம் :

சிதம்பரத்திலிருந்து 29 கி.மீ. தூரத்தில் உள்ள காட்டுமன்னார்கோயிலுக்கு சென்று, அங்கிருந்து 2 கி.மீ. ஆட்டோவில் சென்றால் வடவாற்றங்கரையில் உள்ள கோவிலை அடையலாம்.
Previous Post
Next Post

0 Comments: