முன்குறிப்புகள் : இந்த பிரியாணியை விறகு அடுப்பில் செய்வதே மிகச் சிறந்தது (அதிலும் புளியமர விறகு) ருசியும் அபாரமாக இருக்கும். ஆகவே கூடிய மட்டும் குக்கரில் செய்யாமல் திறந்த பாத்திரத்தில் செய்து தம் போட்டு இறக்கி வைப்பது சிறந்தது! சீரக சம்பா அரிசியில் மட்டுமே செய்யவேண்டும். அரிசியை விட மட்டன் கூடுதலாக இருக்க வேண்டும். இனி சமைக்கலாமா..
தேவையான பொருட்கள்: கறிக் கடையில் கிடா விருந்துக்கு கொடுப்பது போல கறி எனக் கேட்டு ஒன்றரை கிலோ கறியை எலும்புடன் வெட்டி வாங்கவும். கொழுப்பு 200 கிராம் தனியாக வாங்கவும். சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ, சன்னமாக நறுக்கிய பழுத்த தக்காளி - 350 கிராம், பச்சடிக்கு நறுக்குவது போல நறுக்கிய வெங்காயம் - 1/2கிலோ, பச்சை மிளகாய் - 10,
பூண்டு - 150 கிராம், இஞ்சி - 100 கிராம், கொத்தமல்லி- 1 கட்டு, புதினா - 1 கட்டு, புளிக்காத கெட்டித் தயிர் - 200கிராம், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், டால்டா - 100 கிராம்,நெய் - 100 கிராம், கடலை எண்ணெய்- தேவைக்கு, உப்பு- தேவைக்கு, தனி மிளகாய் தூள் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் / உங்கள் காரத்திற்கு ஏற்ப..
தாளிக்க : பட்டை 1 துண்டு லவங்கம் 7, சோம்பு 1 tbs, மராத்தி மொக்கு 1, ஏலக்காய் 8, அன்னாசி பூ 1 பிரிஞ்சி இலை 2
செய்முறை : அரிசியை நன்கு கழுவி 35 நிமிடங்கள் ஊற வைக்கவும்.இஞ்சி பூண்டு பச்சை மிளகாயை விழுதாக அரைக்காமல் அம்மி அல்லது உரலில் இட்டு இடித்த வெற்றிலை பதத்தில் இடித்து வைப்பது மிகவும் முக்கியம்.
அடி கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து டால்டா, நெய், மற்றும் எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.பின்பு அதில் இடித்து வைத்த இஞ்சி பூண்டு கலவை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும், பின்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதன்பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்! இதிலேயே பாதி புதினா & கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் கழுவி வைத்த மட்டன்/கொழுப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கவும், பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 1 டீஸ்பூன், மற்றும் தயிர் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும் பின்பு பாதி உப்பு போடவும்.
இதில் ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் விட்டு மூடி போட்டு 40 நிமிடங்கள் வேகவிடவும். குக்கராக இருந்தால் சற்று நீர் அதிகம் விட்டு மட்டன் தன்மைக்கு ஏற்ப 7-8 விசில்கள் விட்டு வேக வைக்கவும். அவ்வப்போது முடியை திறந்து தேவைக்கு நீர் சேர்க்கவும் மட்டன் நன்கு வெந்ததும் இதில் தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும் ( ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் நீர்)
தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து மீதம் உள்ள உப்பு போட்டு அரிசியை அதிக வெப்பத்தில் ஐந்து நிமிடம் வைத்து கொதிக்கவிட்டு பின்பு மிதமான வெப்பத்தில் ஐந்து நிமிடம் வேக விடவும். இப்போது உப்பு, காரம் சரிபார்க்கவும் ஏதாவது குறைந்தால் சரி செய்யவும் இதில் மீதம் உள்ள புதினா, கொத்தமல்லி மேலே தூவவும்.
பின்னர் நெருப்பை சிம்மில் வைத்துவிட்டு மேலே ஒரு மூடி போட்டு அதன் மேல் ஏதேனும் வெயிட் வைக்கவும். இதேபோல் 15 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். இதை குக்கரில் செய்பவர்கள் மிதமான வெப்பத்தில் ஒரு விசில் வரும் வரை அல்லது பத்து நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்து சமைக்கவும்.
இப்போது 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பின்னர் தம்மை ஓபன் செய்து பிரியாணியின் மீது பரவலாக நெய் ஊற்றி ஒரு கரண்டியால் பக்கவாட்டில் இருந்து கலக்கி விடவும்! ருசியான காரசாரமான பாரம்பரிய முனியாண்டி விலாஸ் பிரியாணி ரெடி. தயிர் பச்சடி, க்ரேவி அல்லது தால்ஸாவுடன் பரிமாறவும்!
பின்குறிப்புகள் : எப்போதும் அரிசியை விட கறி இதற்கு அதிகமாக வேண்டும். மற்றும் கொழுப்பு கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
டால்டா வேண்டாமெனில் நீங்கள் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த பிரியாணி சிறிது குழைவாக இருந்தால் தான் ருசியாக இருக்கும்! ஓவராக குழைந்துவிடவும் கூடாது!
லேசான குழைவே பிரியாணிக்கு தனித்த ருசியைக் கொடுக்கும்.
இந்த பிரியாணி சற்று காரமாக இருப்பதே இதன் தனிச் சிறப்பு.
0 Comments: