வெள்ளி, 13 டிசம்பர், 2024

குருவாயூர் ஏகாதசி என்று சிறப்பித்துச் சொல்லப்படும்

குருவாயூர் ஏகாதசி என்று சிறப்பித்துச் சொல்லப்படும்



குருவாயூர் ஏகாதசி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் கைசிக ஏகாதசி கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச ஏகாதசி. இந்த ஏகாதசி வைகுண்ட ஏகாதசியை விடவும் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஏகாதசியன்று விரதம் இருந்தால் வருடம் முழுவதும் எல்லா ஏகாதசிகளுக்கும் விரதம் இருந்த பலன் கிடைக்குமாம்.

‘கைசிகம்’ என்பது ஒரு வகை பண்ணாகும். வாராஹ புராணத்தில் இந்த கைசிக ஏகாதசி தோன்றியதைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது. பாணர் குலத்தில் தோன்றிய நம்பாடுவான் மிகச் சிறந்த பெருமாள் பக்தர். இவர் திருக்குறுங்குடி திருத்தலத்தில் குடிகொண்டுள்ள நம்பிப் பெருமானை வழிபடுவதற்காக கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று கைசிகப் பண் இசைத்துக் கொண்டு கிளம்பினார். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் ‘எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. எனக்கு நீதான் இன்றைக்கு உணவு!’ என்று அவரைப் பிடித்துக் கொண்டான். நம்பாடுவார், ‘என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும்?’ என்றவர், ‘ஆனால், நான் போய் பெருமாளை தரிசனம் செய்து விட்டு வருகிறேன். அதன் பின் என்னை உணவாக ஏற்றுக் கொள்!’ என்றார்.
நம்பாடுவார் பெருமாள் சன்னிதிக்குச் சென்று மிக உருக்கமாக ஒரு கைசிகப் பண்ணைப் பாடினார். அவர் திரும்ப வந்தபோது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி மறைந்து விட்டது. எனவே, அவன் நம்பாடுவாரை உண்ண மறுத்தான். மேலும் தனக்கு சாப விமோசனம் அருளுமாறும் அவரை வேண்டினான். நம்பாடுவாரும் தான் பாடிய கைசிகப் பண்ணின் புண்ணியத்தை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது. இந்தக் கதை கைசிக ஏகாதசியின் சிறப்பை கூறுகிறது.

இந்த ஏகாதசி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. குருவாயூரில் குருவாயூர் கேசவன் என்று அழைக்கப்பட்ட கஜராஜன் மறைந்த நாள் குருவாயூர் ஏகாதசி நாளாகும். அதனால் அந்த நாள் குருவாயூர் கேசவனின் நினைவு நாளாகவும் குருவாயூரில் அனுசரிக்கப்படுகிறது

Previous Post
Next Post

0 Comments: