திங்கள், 13 ஜனவரி, 2025

போகிப்பண்டிகை குறித்த சுவாரஸ்சிய வரலாறு!

போகிப்பண்டிகை குறித்த சுவாரஸ்சிய வரலாறு!


பழையன கழிதலும், புதியன புகுதலுமாய் கொண்டாடப்படும் போகி பண்டிகையின் சிறப்புகள் நிறைந்த வரலாறு இங்கே உங்களுக்காக...

தமிழர்களுக்கு மார்கழி மற்றும் தை வந்தாலே கொண்டாட்டங்களுக்குப் பஞ்சம் இல்லை. மார்கழி 30 நாளும் அதிகாலையில் எழுந்து கோவிலுக்குச் செல்வார்கள். குளிர்காற்றாக இருந்தாலும் இந்த மாதத்தில் சுத்தமான ஆக்ஸிஜனை நாம் பெற முடிகிறது. இவ்வாறு 30 நாள்களும் பழங்காலம் முதல் ஆன்மீகத்திற்கு உரிய மாதமாகவே இருந்து வருகிறது. இந்த மாதம் முடிவடையும் நேரத்தில் தான் தைத்திருநாள்களுக்கான முதல் கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆம் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளும், மார்கழியின் இறுதி நாள் தான் தமிழர்களால் போகிப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதோ அதற்கான வரலாறுகள் இங்கே உங்களுக்காக...

போகிப்பண்டிகையின் வரலாறு:

இன்பத்தைக் குறிக்கும் சொல் தான் போகி.. இதுவரை எந்த கஷ்டங்கள் இருந்தாலும் அதை அனைத்தையுமே மறந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை முன்னிறுத்தும் பண்டிகையாக போகி விளங்குகிறது. தைத்திருநாள் என்பது உழவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நாள் தான்.அதே சமயம் இவற்றை எப்போதும் செழிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றால் மழை அவசியமான ஒன்று இல்லையா? உழவர்களுக்கு விவசாயம் செய்கின்ற நேரத்தில் மழையைத் தருகின்ற இந்திர பகவானுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நாளாகப் பார்க்கப்படுவதாக சில வரலாறுகள் கூறுகின்றனர்.

மேலும் இதுவரை கடந்த காலத்தில் நிகழ்ந்த அனைத்து விஷயங்களையும் மறந்து தமிழர்களின் புத்தாண்டு தினமாக தை மாதத்தில் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள். இதோடு போகிப் பண்டிகையன்று விடியற்காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் இருக்கக்கூடிய பழைய பொருள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துவார்கள். முன்பெல்லாம் பழைய பொருள்களையெல்லாம் ஒன்று திரட்டி எரிப்பதோடு, மோளம் கொட்டி உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். இந்த உற்சாகமே மனதில் எந்த கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்துமே தூக்கி எரிய செய்துவிடும்.

வீட்டில் உள்ள பழைய பொருள்களை மட்டுமில்லாமல் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் தூக்கி எறிய வேண்டும் என் நம் முன்னோர்கள் சொல்லும் கதையும் உண்டு. முன்பெல்லாம் வீட்டிற்கு வண்ணமடித்து, மண் வீடுகளுக்கு சாணம் போட்டு மொழுகுவார்கள். பழைய பொருள்கயையெல்லாம் எரித்துவிட்ட பின்னதாக வீட்டிற்குத் தேவையான பதிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள்.

தைத்திருநாள் மட்டுமில்லாது போகி பண்டிகையன்றும் சில இடங்களில் பொங்கல் வைப்பதும் வழக்கம். மேலும் இனிப்பு,வடை, பாயாசம் போன்றவற்றையும் தங்களுடைய நிலத்தில் விளைந்த சிறுதானியங்களையும் சமைத்துப் படையலிடுவார்கள். பொங்கல் பண்டிகையில் எப்படி சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கிறோமோ? அதுப்போன்று தான் இந்த போகிப்பண்டிகையில் நிலத்திற்கு நன்மைப் பயக்கும் மழைக்கு நன்றி தெரிவிக்கின்றனர் மக்கள். இதோடு தங்களுடைய நிலங்கள் மற்றும் வீடுகளில் அம்மங்காப்பு செடிகளை வைப்பதும் வழக்கம்.

நீங்களும் இந்த போகிப்பண்டிகையில் தீயவற்றை மறந்து புதிய விஷயங்களோடு உங்களது பொங்கலைக் கொண்டாடுங்கள்.
Previous Post
Next Post

0 Comments: